sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆன்லைன் மோசடி தடுப்பு செயலியை பதிவிறக்குவது கட்டாயமல்ல! விரும்பினால் நீக்கலாம் என அமைச்சர் விளக்கம்

/

ஆன்லைன் மோசடி தடுப்பு செயலியை பதிவிறக்குவது கட்டாயமல்ல! விரும்பினால் நீக்கலாம் என அமைச்சர் விளக்கம்

ஆன்லைன் மோசடி தடுப்பு செயலியை பதிவிறக்குவது கட்டாயமல்ல! விரும்பினால் நீக்கலாம் என அமைச்சர் விளக்கம்

ஆன்லைன் மோசடி தடுப்பு செயலியை பதிவிறக்குவது கட்டாயமல்ல! விரும்பினால் நீக்கலாம் என அமைச்சர் விளக்கம்

2


ADDED : டிச 03, 2025 05:03 AM

Google News

2

ADDED : டிச 03, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,: “ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்கான, 'சஞ்சார் சாத்தி' செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் அல்ல; மற்ற செயலிகளை போல தேவையில்லை என பயனாளர்கள் நினைத்தால் அதை நீக்கிவிடலாம்,” என, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.

திருடு போகும், 'மொபைல் போன்'களை கண்டறிவதற்கும், 'ஆன்லைன்' மோசடிகளை தவிர்ப்பதற்கும், 'சஞ்சார் சாத்தி' என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

'புதிதாக தயாரிக்கப்படும் மொபைல் போன்களில் இந்த செயலியை முன்பே நிறுவி இருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களில், 90 நாட்களுக்குள் நிறுவ வேண்டும்' என, மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தி இருந்தது.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய மொபைல் போன்களிலும் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் செயலியை பதிவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

சுற்றறிக்கை



இது தொடர்பாக கடந்த வாரம் மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், மொபைல் போன்களின் பயன்பாட்டின்போது இந்த செயலி எளிதில் காணக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்; செயலியின் செயல்பாடுகளை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்நிலையில், குடிமக்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கிறது என காங்., குற்றஞ்சாட்டியது.

மேலும், மக்களை உளவு பார்க்கவே இந்த செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக விமர்சித்தது.

பார்லி., வளாகத்துக்கு வெளியே நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:

பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே இந்த செயலியை அரசு உருவாக்கியுள்ளது. இந்த செயலியை மொபைல் போன்களில் வைத்திருப்பதும்; நீக்குவதும் பயனாளர்களின் விருப்பம். மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.

'சஞ்சார் சாத்தி' செயலியை, 1.50 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் திருடு போன, 20 லட்சம் மொபைல் போன்கள் எங்கு இருக்கின்றன என்ற தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.

அதை வைத்து, தோராயமாக 7.50 லட்சம் மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த செயலி மூலம் அழைப்புகளை ஒட்டுக் கேட்கவோ, உளவு பார்க்கவோ முடியாது.

செயலியின் முழு கட்டுப்பாடும் பயனாளர்களிடமே இருக்கும். எனவே, ஒரு பயனர் விரும்பினால், எந்த நேரத்திலும், அந்த செயலியை மொபைல் போனில் இருந்து நீக்கலாம்.

போலி செய்தி



மக்களின் நலனுக்காக இந்த செயலியை அறிமுகம் செய்வது அரசின் கடமை. மற்ற செயலிகளை போலவே இந்த செயலியையும் நினைத்தபோது நீக்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அமித் மாள்வியா கூறுகையில், “சஞ்சார் சாத்தி செயலி குறித்து போலியான செய்திகள் உலவுகின்றன.

“இது உளவு பார்க்கும் கருவி அல்ல. மொபைல் போனில் இருக்கும் குறுஞ்செய்திகள், அழைப்புகள், தனிப்பட்ட தரவுகளை இந்த செயலி கட்டுப்படுத்தாது. விரிவான தொலைதொடர்பு பாதுகாப்புக்காகவே இந்த செயலி கட்டமைக்கப்பட்டு உள்ளது,” என்றார்.

ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்பு? 'சஞ்சார் சாத்தி' செயலியை தங்களது மொபைல் போன்களில் நிறுவும் விவகாரத்தில், 'ஆப்பிள்' மற்றும், 'சாம்சங்' நிறுவனங்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. தற்போதைய வடிவில் இந்த செயலியை தங்களது மொபைல் போன்களில் முன்கூட்டியே நிறுவ வாய்ப்பு இல்லை என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. செயலியை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது என்ற அறிவுறுத்தல் தனியுரிமையை மீறுவதாக இருப்பதாக, 'ஆப்பிள்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், 'சஞ்சார் சாத்தி' செயலி அந்நிறுவன தயாரிப்புகளில் முன்கூட்டியே இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



விளக்கமும், முரண்பாடும்... 'சஞ்சார் சாத்தி' செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயமல்ல என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்த நிலையில், அரசு வெளியிட்ட அறிக்கை அதற்கு முரணாக இருப்பதாக இணையதள பயனாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மொபைல் போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவுவது தொடர்பாக, மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த வாரம் சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. இது தொடர்பாக அனுப்பியிருந்த சுற்றறிக்கையில், 'புதிதாக தயாரிக்கப்படும் மொபைல் போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவி இருக்க வேண்டும். 'தெளிவாக தெரியும்படியும், பயனாளர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும். அந்த செயலியின் செயல்பாட்டை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது' என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த நிபந்தனையை தான் இணையதள பயனர்கள் சுட்டிக்காட்டி அரசு பிறப்பித்த சுற்றறிக்கைக்கும், அமைச்சரின் விளக்கத்திற்கும் முரண்பாடுகள் இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளனர்.








      Dinamalar
      Follow us