ADDED : மார் 14, 2024 10:23 PM

- நமது நிருபர் -பழைய மைசூரில் உள்ள முக்கிய தொகுதிகளில், பெங்களூரு ரூரலும் ஒன்று. 2009ல் தொகுதி மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு, பெங்களூரு ரூரல், கனகபுரா லோக்சபா தொகுதியாக இருந்தது. 1952 முதல் 2004 வரை நடந்த 12 தேர்தல்களில், காங்கிரஸ் ஒன்பது முறையும், ம.ஜ.த., இரண்டு முறையும், பா.ஜ., ஒரு முறையும் வென்றது.
கடந்த 2004 தேர்தலில் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்ட தேவகவுடாவை, காங்கிரஸ் வேட்பாளர் தேஜஸ்வினி தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார். தொகுதி மறுசீரமைப்புக்கு பின் 2009ல் நடந்த தேர்தலில், ம.ஜ.த.,வின் குமாரசாமி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், 2013ல் நடந்த சட்டசபை தேர்தலில், ராம்நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற குமாரசாமி, எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அப்போது நடந்த இடைத்தேர்தலில், ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்டவர் குமாரசாமியின் மனைவி அனிதா.
தேஜஸ்வினியை மீண்டும் காங்கிரஸ் களம் இறக்கும் என்று நினைத்த போது, யாரும் எதிர்பாராத வகையில் களம் இறக்கப்பட்டவர், தற்போதைய துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ். அவரும் முதல் தேர்தலிலேயே சாதித்து காட்டினார். அனிதாவை 1.37 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அடுத்த ஆண்டு 2014ல் நடந்த தேர்தலிலும் சுரேஷ் 2,31,480 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பா.ஜ.,வின் முனிராஜ் கவுடாவை வீழ்த்தினார். 2019 தேர்தலில், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் சுரேஷ் மட்டும் தான். அந்த தேர்தலில் கர்நாடகா காங்கிரசின் மானத்தை காப்பாற்றினார். 2,06,870 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஒக்கலிகர்
பெங்களூரு ரூரல் தொகுதியில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில், முக்கிய பங்கு வகிப்பது ஒக்கலிகர் சமூக ஓட்டுகள். சுரேஷ், ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர்.
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு துமகூரின் குனிகல், பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகர், பெங்களூரு தெற்கு, ஆனேக்கல், ராம்நகரின் ராம்நகர், மாகடி, கனகபுரா, சென்னப்பட்டணா என, எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
ராஜராஜேஸ்வரி நகர், பெங்களூரு தெற்கு தவிர்த்து, மற்ற ஆறு தொகுதிகளும் கிராமப்புற தொகுதிகள்.
கிராமப்புற மக்கள் இன்னும் காங்கிரசை தான் ஆதரித்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு தேர்தலிலும், காங்கிரசின் வெற்றி எளிதாக இருக்கிறது. ராஜராஜேஸ்வரி நகர், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வினர். சென்னப்பட்டணா எம்.எல்.ஏ., குமாரசாமி. மற்ற ஐந்து தொகுதிகளிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்.
குமாரசாமி
'அரசியல் எனக்கு அலுத்து விட்டது. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசிப்பேன்' என்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ் கூறி இருந்தார். இதனால் இம்முறை அவர் போட்டியிடுவாரா என்று கேள்வி எழுந்தது. ஆனால் காங்கிரஸ் வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில், சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுரேஷுக்கு எதிராக களமிறங்க, ம.ஜ.த.,வின் குமாரசாமி, பா.ஜ.,வின் யோகேஸ்வர் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. 'என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும், அவர்களை வரவேற்கிறேன்' என்று சுரேஷும் கூறி இருந்தார். சுரேஷுக்கு எதிராக குமாரசாமி போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என்று, அரசியல் விமர்சர்களும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
நக்கல், நையாண்டி
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடாவின் மருமகன், டாக்டர் மஞ்சுநாத், பெங்களூரு ரூரலில் பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரும் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜெயதேவா இதய மருத்துவமனையின் இயக்குனராக இருந்தவர்.
மாநில மக்களின் அன்பை பெற்றவர். சுரேஷுக்கு போட்டி அளிக்க சரியான நபர் என்று நினைத்து, மஞ்சுநாத்தை பா.ஜ., வேட்பாளராக அறிவித்து உள்ளது.
ம.ஜ.த., - பா.ஜ., ஓட்டுகள் மூலம் மஞ்சுநாத் எளிதில் வெற்றி பெறுவார் என்று, பா.ஜ., கணக்கு போட்டு உள்ளது.
மஞ்சுநாத் வெற்றி பெற்றால், அவருக்கு மத்தியில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும், இந்தியாவை இரண்டாவது பிரிக்க வேண்டும் என்று சுரேஷ் கூறியதை வைத்து, பிரசாரம் செய்யவும், பா.ஜ., தயாராகி வருகிறது. மஞ்சுநாத் களமிறங்கி இருப்பதால், சுரேஷை வெற்றி பெற வைக்க, அவரது அண்ணன் சிவகுமாரும், பல திட்டங்களை வகுத்து வருகிறார்.
ஒருவேளை சுரேஷ் தோற்றால், ம.ஜ.த., - பா.ஜ., கட்சிகள் கேலி, கிண்டலை சிவகுமார் சந்திக்க நேரிடும். இதனால் எக்காரணம் கொண்டும், தம்பி தோற்றுப் போக அவர் விடவே மாட்டார்.
இதற்கிடையில், 'அப்பாவியான டாக்டர் மஞ்சுநாத்தை களமிறக்கி, அவரை பலிகடாவாக்கி விட்டனர்' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இப்போதே நக்கல், நையாண்டி பேச ஆரம்பித்து உள்ளனர்.
ஆனால் டாக்டர் மஞ்சுநாத் அமைதியாக இருக்கிறார். தொடர்ந்து, நான்காவது வெற்றிக்கு காத்திருக்கும், சுரேஷுக்கு, டாக்டர் மஞ்சுநாத் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பாரா என்பது, தேர்தல் முடிவில் தெரியவரும்.
டில்லி எம்.பி., இல்லை; ஹள்ளி எம்.பி.,
தம்பி சுரேஷை வெற்றி பெற வைக்க, அண்ணன் சிவகுமார் தற்போது புதிய வார்த்தையை, பயன்படுத்தி வருகிறார். 'தேர்தலில் சுரேஷ் தோற்றால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. பெங்களூரு ரூரல் மக்களுக்கு தான் இழப்பு. சுரேஷ் எப்போதும் டில்லி எம்.பி.,யாக இருந்தது இல்லை. ஹள்ளி எம்.பி.,யாகவே இருந்து உள்ளார். தொகுதியில் எத்தனை வீடுகள் உள்ளது, எத்தனை ஏரிகள் உள்ளது என்று, அனைத்தையும் விரல்நுனியில் வைத்து உள்ளார். எம்.பி.,யாக நடந்து கொண்டதே இல்லை. பஞ்சாயத்து உறுப்பினர் போன்றே வேலை செய்கிறார்' என்று கூறுகிறார்.
டாக்டர் மஞ்சுநாத் புத்திசாலி
காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கூறுகையில், ''தேவகவுடா, குமாரசாமி சரியில்லை. ம.ஜ.த., கட்சியும் சரியான நிலையில் இல்லை என்று தெரிந்ததும், தேவகவுடாவின் மருமகன் டாக்டர் மஞ்சுநாத் புத்திசாலித்தனமாக, பா.ஜ., பக்கம் சென்று விட்டார்.
''அவரது அரசியல் பிரவேசம் பற்றி, நான் கருத்து கூற முடியாது. டாக்டர் மஞ்சுநாத், தேவகவுடா குடும்பத்தில் இருந்து வரும் இன்னொரு அரசியல் வாரிசு. பெங்களூரு ரூரலில் என்னை தோற்கடிக்க குமாரசாமி, யோகேஸ்வர் ஒன்றிணைந்து உள்ளனர். அவர்களுக்கு கடவுள் நல்லது செய்யட்டும்,'' என்றார்.

