ADDED : ஜன 08, 2024 06:50 AM
கோலார்; கணவரை கொன்று சாக்கடைசில் வீசி, காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கோலார், பங்கார்பேட்டின், கோகிலஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சங்கர ரெட்டி, 45. இவர் பெங்களூரின், ஒயிட்பீல்டு அருகில் உள்ள நல்லாரஹள்ளியில், சிறிய ஹோட்டல் நடத்துகிறார். இவரது மனைவி சுனந்தா, 35.
இவர்களின் ஹோட்டல் அருகில் உள்ள, பள்ளியில் வாகன ஓட்டுனராக வெங்கடேஷ், 35, பணியாற்றுகிறார். இவர்கள் ஒரே இடத்தில் வசித்ததால், சுனந்தாவுக்கும், வெங்கடேஷுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.
இது, கணவர் சங்கர ரெட்டிக்கு தெரிந்து, இருவரையும் திட்டி கண்டித்தார். எனவே கணவரை கொல்லும்படி, வெங்கடேஷிடம் சுனந்தா கூறினார்.
இதன்படி சில நாட்களுக்கு முன், சங்கர்ரெட்டியை முல்பாகலுக்கு வரவழைத்த வெங்கடேஷ், மது குடிக்க வைத்தார். அதன்பின் இரும்புத்தடியால் மண்டையில் அடித்து கொலை செய்து, உடலை ஒயிட் பீல்டு அருகில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு தப்பினார்.
அதன்பின் பேத்தமங்களா போலீஸ் நிலையத்துக்கு சென்ற சுனந்தா, தன் கணவர் காணாமல் போனதாக நாடகமாடி புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், சுனந்தாவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்தது.
அவரை விசாரித்த போது, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.