ADDED : மார் 22, 2025 05:46 AM

ஜெயநகர் : பூங்காவில் தனியாக அமர்ந்து பேசிய காதல் ஜோடியை மிரட்டி பணம், நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, ஜெயநகரில் உள்ள பூங்காவில், 16ம் தேதி காதல் ஜோடி தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த ஒருவர், காதல் ஜோடியிடம், 'இங்கு அமர்ந்து பேசக்கூடாது' என்றார். இதற்கு காதல் ஜோடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கோபம் அடைந்த அந்த நபர், 'நான் போலீஸ்; நீங்கள் இருவரும் காதல் செய்வதை, உங்கள் வீட்டில் கூறுவேன். வீட்டில் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும்' என, மிரட்டினார்.
காதல் ஜோடியை மிரட்டி தங்க செயின், மோதிரம், 10,000 ரூபாயை பறித்துவிட்டு தப்பினார்.
தங்களை மிரட்டி பணம் பறித்தது, போலீஸ்காரர் இல்லை என்ற சந்தேகம், காதல் ஜோடிக்கு வந்தது. ஜெயநகர் போலீசில் காதலன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.
பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த ஆட்டோ டிரைவர் ஆசிப், 45, என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இவர், பல காதல் ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் விசாரணை நடக்கிறது.