ADDED : ஜூன் 01, 2025 03:19 AM

ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ் மஹாலின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், 'ட்ரோன்' தடுப்பு கவசம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் இயங்கும் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், நம் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, நம் நாட்டில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து, பாகிஸ்தான் படையினர் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். அவற்றை நம் வான் பாதுகாப்பு கவசங்கள் வெற்றிகரமாக முறியடித்தன.
இதையடுத்து, நம் நாட்டின் சுற்றுலா தலங்கள் உட்பட முக்கிய பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில், ட்ரோன் தடுப்பு கவசங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை சுற்றி, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பு கவசங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.
ரேடியோ
இதுகுறித்து தாஜ் மஹாலின் பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் உதவி போலீஸ் கமிஷனர் சையது ஆரிப் அகமது கூறுகையில், “தாஜ் மஹால் அமைந்துள்ள பகுதியில் இருந்து 8 கி.மீ., தொலைவில் வரும் ட்ரோன்களை, இந்த தடுப்பு கவசங்கள் துல்லியமாக தாக்கி அழிக்கும்.
''ரேடியோ அலைவரிசை சிக்னல்களை பயன்படுத்தி, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தின் வாயிலாக ட்ரோன்களை, இந்த பாதுகாப்பு கவசங்கள் செயலிழக்கச் செய்யும்,” என்றார்.