டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப் பொருள் பறிமுதல்; கடத்தல் "குருவி"கள் குறித்து விசாரணை
டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப் பொருள் பறிமுதல்; கடத்தல் "குருவி"கள் குறித்து விசாரணை
UPDATED : ஜன 29, 2026 11:00 PM
ADDED : ஜன 29, 2026 10:04 PM

புதுடில்லி: டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, அமிர்தசரஸ் நகரில், 42 கிலோ ஹெராயினை, அம் மாநில போலீசார் பறிமுதல் செய்தனர்.
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த இந்தியர் ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு உரியதாக இருந்தன. அவர் தனக்குரிய லக்கேஜ்களை சோதனைக்கு உட்படுத்தாமல், தவிர்க்க முயன்றதும் கண்டறியப்பட்டது.
உடன் சுங்கத்துறையினர் அவரை நிறுத்தி, லக்கேஜ்களையும், கைப்பையையும் சோதனை செய்ததில், ஒன்பதுக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றில் இருந்த பொருட்களை ஆய்வக சோதனைக்கு உட்படுத்தியதில், அவை ரூ.10 கோடி மதிப்புள்ள மரிஜூவான போதைப்பொருள் என்று கண்டறியப்பட்டது. உடன் அந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதை கடத்தி வந்த பயணியும் கைது செய்யப்பட்டார்.
இதேபோல, பஞ்சாப் போலீசார் நடத்திய சோதனையில், 42 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன், நான்கு கையெறி குண்டுகளும், துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, அமிர்தசரஸ் நகரை சேர்ந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மற்றொரு நபரை தேடும் பணி நடந்து வருகிறது.அத்துடன், ஹெராயின் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

