போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள்: போலீஸ் கமிஷனர் கோபம்
போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள்: போலீஸ் கமிஷனர் கோபம்
ADDED : அக் 26, 2025 07:29 PM

ஹைதராபாத்: '' போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகளை போன்றவர்கள். அவர்களின் அலட்சியத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது,'' என ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் விஎஸ் சஜ்ஜானார் கூறியுள்ளார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு நோக்கி, நான்கு குழந்தைகள் உட்பட 44 பயணியருடன் கடந்த 23ம் தேதி இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தின் சின்னதேகுரு பகுதிக்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை, 2:45 மணியளவில் சென்றபோது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்ட பைக், பஸ்சின் அடியில் சென்று டீசல் டேங்கில் மோதியது. இதில், பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், பஸ்சில் இருந்த, 19 பயணியர் மற்றும் பைக் மோதி விபத்தை ஏற்படுத்திய நபர் என மொத்தம், 20 பேர் உயிரிழந்தனர்.
ஆம்னி பஸ் மீது பைக் மோதி விபத்தை ஏற்படுத்திய சிவசங்கர், விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் தன் நண்பருடன் அங்குள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இந்த வீடியோ பதிவில், பெட்ரோல் பங்க்கில் யாரும் இல்லாததால், தன் பைக்கை தனியாக எடுத்துச் சென்றார். அப்போது, அவர் நிதானமற்ற சூழலில் பைக்கை ஓட்டிச்சென்றது தெரியவந்தது. இதனால், அவர் குடிபோதையில் இருந்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவசங்கரின் நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜானார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள். அவர்களின் செயல், சாலைகளில் பயங்கரவாத சம்பவத்துக்கு ஒப்பானது. 20 அப்பாவி மக்களின் உயிரைபறித்த கொடூரமான கர்னூல் பஸ்விபத்து ஒரு விபத்து கிடையாது. இது ஒரு படுகொலை. குடிபோதையில் வாகனம் ஓட்டியவரின் பொறுப்பற்ற நடத்தையால் ஏற்பட்டது. இது ஒரு சாலை விபத்து அல்ல. ஆனால், சில நொடிகளில் முழு குடும்பங்களையும் அழித்த ஒரு அலட்சியச் செயல். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

