ADDED : பிப் 29, 2024 07:35 AM
பெங்களூரு : பிட்காயின் மோசடி வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பிட்காயின் வழக்கை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பெங்களூரு ஜெயநகரை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்கிற ஸ்ரீகி, 29, என்பவருக்கு தொடர்பு இருப்பது ஏற்கனவே தெரிய வந்தது.
இவர் தடை செய்யப்பட்ட, ஹைட்ரோ கஞ்சா விற்ற வழக்கில், 2020ல் கைது செய்யப்பட்டவர். இவர் மீது அரசு இணையதளத்தை முடக்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
எஸ்.ஐ.டி., நடத்திய விசாரணையில், ஸ்ரீகிருஷ்ணாவை முதலில் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆதாரங்களை அழிக்கும் வகையில், பிட்காயின்களை சேதப்படுத்தியது தெரிந்தது. இதுகுறித்து எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் பாபு உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் பிரசாந்த் பாபு கைது செய்யப்பட்டார். நான்கு நாட்களுக்கு முன்பு, அவருக்கு ஜாமின் கிடைத்தது.
இந்நிலையில் பிட்காயின் மோசடியில், வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் லட்சுமி காந்தய்யா, டி.எஸ்.பி., ஸ்ரீதர் பூஜார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து நேற்று லட்சுமி காந்தய்யாவை, எஸ்.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
டி.எஸ்.பி., ஸ்ரீதர் பூஜாரை கைது செய்ய சென்றபோது, எஸ்.ஐ.டி., போலீசார் மீது காரால் மோதிவிட்டு, தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து விதான் சவுதா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை போலீசார் தேடுகின்றனர்.

