தேர்தல் நேரத்திலும் காங்., சண்டை ஓயவில்லை! : காங்., மூத்த தலைவர் முதல்வர் மீது அதிருப்தி சிவகுமாருடன் சண்டை இல்லை என சித்து சால்ஜாப்பு
தேர்தல் நேரத்திலும் காங்., சண்டை ஓயவில்லை! : காங்., மூத்த தலைவர் முதல்வர் மீது அதிருப்தி சிவகுமாருடன் சண்டை இல்லை என சித்து சால்ஜாப்பு
ADDED : ஏப் 27, 2024 11:23 PM

பெங்களூரு, ஏப். 28- முதல்வர் சித்தராமையா மீது, காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். முதல்வர், துணை முதல்வருக்கு இடையே உட்கட்சி பூசல் நிலவுவதால், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டுக்கு, 'எங்களிடம் எந்த உட்கட்சி பூசலும் இல்லை' என்று, முதல்வர் சித்தராமையா சால்ஜாப்பு கூறியுள்ளார். தேர்தல் நேரத்திலும் காங்கிரஸ் சண்டை ஓயவில்லை.
காங்கிரசின் மூத்த தலைவர் ஹரிபிரசாத். இவர் சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவர். இதனால் தான், 2019ல் லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், எம்.எல்.சி., பதவி தரப்பட்டது. முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது, சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவராகவும் ஆக்கப்பட்டார்.
இவருக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே, பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பகிரங்கமாகவும், முதல்வருக்கு எதிராகவும் பேசி உள்ளார். பின், கட்சி மேலிடம் அறிவுறுத்தல் காரணமாக, சில நாட்கள் அமைதியானார். தற்போது மீண்டும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பா.ஜ.,வினருக்கு அபாயம்
கொப்பாலில் பிரசாரத்துக்கு இடையில், ஹரிபிரசாத் கூறியதாவது:
இந்த நாட்டில், ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என உயர் பதவிகளில் ஹிந்துக்களே உள்ளனர். ஆனாலும், ஹிந்துக்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார்.
ஹிந்துக்கள், முஸ்லிம்களுக்கு அபாயம் ஏற்படவில்லை. வெறும் பா.ஜ.,வினருக்கு மட்டுமே அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகளை விட்டு விடுங்கள். காங்கிரசார் என்றுமே ஜாதி அரசியல் செய்வது இல்லை.
சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை பார்த்து மட்டுமே, மக்கள் காங்கிரசுக்கு ஓட்டு போடுவர்; மாநில தலைவர்களை பார்த்து யாரும் ஓட்டு போடுவது இல்லை.
தேசிய விஷயங்கள்
சித்தராமையாவை பார்த்து யாரும் ஓட்டு போடுவது இல்லை. தேசிய அளவில் தேர்தல் நடப்பதால், தேசிய விஷயங்களை மனதில் வைத்து கொண்டு தான் மக்கள் ஓட்டு போடுவர். தேசிய அளவில் கட்சியின் செயல்பாட்டை பார்ப்பர். மாநில விஷயங்களை பார்க்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹரிபிரசாத் கூறுவதை வைத்து பார்க்கும் போது, அவருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது தெளிவாகிறது.
லோக்சபா தேர்தல் நேரத்திலும் காங்கிரஸ் தலைவர்களின் சண்டை ஓயாமல் இருப்பது கட்சி தொண்டர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், ''அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு இடையே உட்கட்சி பூசல் நிலவுகிறது. எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும்,'' என்று நேற்று கூறி இருந்தார்.
அசாம் முதல்வர்
இது குறித்து, கலபுரகியில், முதல்வர் நேற்று கூறியதாவது:
எங்கோ அமர்ந்து பேசுபவருக்கு, கர்நாடகா குறித்து என்ன தெரியும்? அசாம் முதல்வர் என்ன பிரதமரா அல்லது பா.ஜ., தேசிய தலைவரா?
கர்நாடக அரசியல் பற்றி பேசுவதற்கு அவர் யார்? எனக்கும், சிவகுமாருக்கும் இடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

