ஜார்க்கண்ட் டி.ஜி.பி., பதவி நீக்கம்: தேர்தல் கமிஷன் அதிரடி
ஜார்க்கண்ட் டி.ஜி.பி., பதவி நீக்கம்: தேர்தல் கமிஷன் அதிரடி
ADDED : அக் 19, 2024 05:00 PM

புதுடில்லி: லோக்சபா மற்றும் ராஜ்யசபா தேர்தலின் போது எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, ஜார்க்கண்ட் மாநில டி.ஜி.பி., பதவியில் இருந்து அனுராக் குப்தாவை நீக்கிவிட்டு வேறு அதிகாரியை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஜார்க்கண்ட் மாநில போலீஸ் டி.ஜி.பி., ஆக இருப்பவர் அனுராக் குப்தா. 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, அம்மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, அவரை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம் டில்லியில் பணியில் அமர்த்தியது. தேர்தல் நடவடிக்கை முடியும் வரை ஜார்க்கண்ட் திரும்ப தடை விதித்தும் உத்தரவிட்டது. அதற்கு முன்னர், 2016ம் ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது அவர் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆக இருந்தார். அப்போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அமைக்கப்பட்ட குழு, அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த பரிந்துரை செய்தது. மாநில அரசும் அதற்கு அனுமதி அளித்து இருந்தது.
இதனிடையே ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கடந்த காலங்களில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து டி.ஜி.பி., பதவியில் இருந்து அனுராக் குப்தாவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட் அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்த அறிக்கையை இன்று இரவுக்குள் அளிக்கவும், புதிய டி.ஜி.பி., குறித்த பட்டியலை நாளை காலைக்குள் அளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.