ADDED : அக் 15, 2024 12:17 AM

எலஹங்கா : குழந்தைகளை கொன்று, மனைவி தற்கொலை செய்து கொண்டதால், கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.
கலபுரகியைச் சேர்ந்தவர் அவினாஷ், 38; டாக்சி ஓட்டுனர். இவரது மனைவி மமதா, 30. தம்பதிக்கு ஆதிரா, 5, என்ற மகளும், அன்னய்யா, 3, என்ற மகனும் இருந்தனர். இவரது குடும்பத்தினர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரு வந்தனர்.
எலஹங்கா அருகில், சிங்கநாயகனஹள்ளியின் எடியூரில் வசித்தனர். அவினாஷ் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார். கிரெடிட் கார்டுக்கு பணம் கட்ட வேண்டியிருந்தது. பணம் புரட்ட முடியாமல் கணவர் அவதிப்படுவதை பார்த்து, மமதா மனம் நொந்தார்.
நேற்று முன்தினம் காலை, அவினாஷ் வழக்கம் போல பணிக்கு சென்றார். மதியம் மனைவிக்கு போன் செய்தார்; அவர் எடுக்கவில்லை. தன் வீட்டு மாடியில் வசிப்பவருக்கு போன் செய்து, தன் மனைவியிடம் போனை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் கதவை தட்டி பார்த்துவிட்டு திறக்கவில்லை என, கூறினார்.
இரவு 9:00 மணியளவில், அவினாஷ் வீட்டுக்கு வந்தார். தன்னிடம் இருந்த மாற்று சாவியால் கதவை திறந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், குழந்தைகள் இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் மனைவி உடலை கீழே இறக்கிய அவர், அதே கயிற்றில் தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவினாஷின் சகோதரர் உதய், நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, விஷயம் தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ராஜானுகுன்டே போலீசார், சடலங்களை மீட்டு விசாரிக்கின்றனர்.