ரூ.1,266 கோடி வங்கி மோசடியில் அதிரடி நடவடிக்கை; துபாயில் ரூ.51 கோடி சொத்து பறிமுதல் செய்தது ஈ.டி.,
ரூ.1,266 கோடி வங்கி மோசடியில் அதிரடி நடவடிக்கை; துபாயில் ரூ.51 கோடி சொத்து பறிமுதல் செய்தது ஈ.டி.,
ADDED : நவ 20, 2025 08:55 AM

நமது நிருபர்
ரூ.1,266 கோடி வங்கி மோசடி வழக்கில், போபால் (மத்திய பிரதேசம்) அமலாக்கத்துறை அதிகாரிகள் துபாயில் ரூ.51.70 கோடி மதிப்பில், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த நவம்பர் 17 ம் தேதி அட்வாண்டேஜ் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் (AOPL), அதன் இயக்குநர்கள், உத்தரவாததாரர்கள் மற்றும் அதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் பாசி உள்ளிட்டோர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.1,266 கோடி மோசடி செய்த வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில், தற்போது வெளிநாட்டு சொத்துக்களுக்கு எதிரான ஒரு பெரிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண மோசடி வழக்கின் கீழ், துபாயில் ரூ.51.70 கோடி மதிப்பில், ஆடம்பரமான 9 அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக இடங்கள் ஆகும். அவற்றில் முக்கியமாக, செஞ்சுரியன் குடியிருப்பு, துபாய் சிலிக்கான் ஒயாசிஸ், லிவா ஹைட்ஸ், பிசினஸ் பே மற்றும் வேர்ல்ட் டிரேட் சென்டர் குடியிருப்புகள் ஆகியவை அடங்கும்.
அட்வாண்டேஜ் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் ஸ்ரீகாந்த் பாசி உள்ளிட்ட தொடர்புடைய நபர்கள் செய்த வங்கி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஸ்ரீகாந்த் பாசிக்கு சொந்தமானவை, அவற்றை அவர் தனது மகளுக்கு பரிசாக அளித்தார். மோசடி செய்து கிடைத்த வருமானத்தை மறைப்பதற்கு 2022 மற்றும் 2023ம் ஆண்டில் பாசிக்கு பரிசாக வழங்கப்பட்ட சொத்துக்களை பிறகு அவரது மகளுக்கு சட்டபூர்வமாக மாற்றி உள்ளார்.
தற்போது, சட்டவிரோத வணிக வர்த்தகம், வங்கியில் கடன் பெற்று மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகியவற்றின் கீழ் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோசடியால் பொதுத்துறை வங்கிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. மோசடியில் தொடர்புடைய நபர்கள் மற்றும் பிற நிறுவனங்களின் தொடர்பை கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

