சோக்சியின் ரூ.125 கோடி சொத்து: பிரித்து கொடுக்கிறது ஈ.டி.,
சோக்சியின் ரூ.125 கோடி சொத்து: பிரித்து கொடுக்கிறது ஈ.டி.,
UPDATED : டிச 11, 2024 02:37 PM
ADDED : டிச 11, 2024 02:22 AM

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் மெஹுல் சோக்சியின் 125 கோடி ரூபாய் சொத்துக்களை பாதிக்கப்பட்டோருக்கு பிரித்துக் கொடுக்கும் பணியை, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை துவங்கி உள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 2014 - 17 வரையிலான கால கட்டத்தில், குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர், 13,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பினர்.
இதில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சிறையில், 2019 முதல், நிரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார்.
கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில், மெஹுல் சோக்சி இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரையும் நாடு கடத்தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும், 6,097.63 கோடி ரூபாய் அளவுக்கு, மெஹுல் சோக்சி மோசடி செய்துள்ளார். இதே போல், தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் வாங்கிய கடனையும் அவர் திருப்பிச் செலுத்தவில்லை.
இது தொடர்பாக வழக்கு பதிந்து, நாடு முழுதும் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், 597.75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், 1,968.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர்.
இவற்றில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள், வாகனங்கள், வங்கிக் கணக்குகள், தொழிற்சாலைகள், பங்குகள், நகைகள் அடங்கும்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், இணைக்கப்பட்ட சொத்துக்களை மதிப்பிடவும், ஏலம் விடவும் வங்கிகள் மற்றும் கடன் அளித்த நிறுவனங்களுக்கு உதவ, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது.
இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் கூட்டு சேர்ந்த அமலாக்கத் துறை, நிதி நிறுவனங்களின் இழப்புகளை மீட்டெடுக்கும் வகையில், இணைக்கப்பட்ட சொத்துக்களை பணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இது தொடர்பாக, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், மெஹுல் சோக்சியுடன் இணைக்கப்பட்ட, 2,565.90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பணமாக்க ஒப்புதல் அளித்தது.
சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி முதற்கட்டமாக, மும்பையில் உள்ள 125 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பணமாக்கி, அதை பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு திருப்பி அளிக்கும் பணியை அமலாக்கத்துறை துவங்கியது.
இதில் மும்பையில் உள்ள குடியிருப்புகள் மற்றும் மும்பை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அடங்கும். பாதிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு, சொத்துக்களை வழங்கும் பணி விரைவில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.