நில மோசடி வழக்கில் ஈ.டி. தீவிரம் முன்னாள் முதல்வரிடம் விசாரணை
நில மோசடி வழக்கில் ஈ.டி. தீவிரம் முன்னாள் முதல்வரிடம் விசாரணை
ADDED : ஜன 18, 2024 01:34 AM

புதுடில்லி, ஹரியானாவில், நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் நடந்த 1,500 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடாவிடம், ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது.
குற்றச்சாட்டு
ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள மானேசர் பகுதியில் 2004 - 07 காலக்கட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து அரசு அதிகாரிகள் முறைகேடாக நிலத்தை கையகப்படுத்தியதில் 1,500 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
சட்டவிரோதமாக நடந்த இவ்விவகாரத்தில் மூத்த அரசு அதிகாரிகள், அப்போது ஆட்சியில் இருந்தவர்களும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதன்படி, 2016ல் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
சம்மன்
இந்த விவகாரத்தில், காங்.,கை சேர்ந்த ஹரியானா முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடாவிடம், விசாரணை நடத்த அமலாக்கத்துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியது.
இதன்படி, நேற்று அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல், இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ.,யும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.