பண மோசடி வழக்கு; ஆம்ஆத்மி எம்.பி., வீட்டில் அமலாக்கத்துறை சல்லடை
பண மோசடி வழக்கு; ஆம்ஆத்மி எம்.பி., வீட்டில் அமலாக்கத்துறை சல்லடை
UPDATED : அக் 07, 2024 11:30 AM
ADDED : அக் 07, 2024 11:26 AM

சண்டிகர்: பணமோசடி வழக்கு தொடர்பாக, பஞ்சாபில் ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பஞ்சாபில், பணமோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜலந்தர் மாவட்டத்தில் சஞ்சீவ் அரோராவின் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில், சஞ்சீவ் அரோரா கூறியதாவது: நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பேன். அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், கெஜ்ரிவால் வீடு, என் வீடு, சஞ்சய் சிங் வீடு, சத்யேந்திர ஜெயின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
மோடியின் விசாரணை அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக போலி வழக்குகளை போடுவதில் ஈடுபட்டனர். எம்.பி., மீதான சோதனைகள் கட்சியை உடைக்கும் முயற்சி' என குறிப்பிட்டுள்ளார்.