ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்; நில ஒதுக்கீடு வழக்கில் கர்நாடகா முதல்வர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்
ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்; நில ஒதுக்கீடு வழக்கில் கர்நாடகா முதல்வர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்
ADDED : ஜன 27, 2025 01:38 PM

பெங்களூரு: முடா நில ஒதுக்கீடு வழக்கில், கர்நாடகா முதல்வரின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அனுமதி அளித்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சித்தராமையா மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் ரூ.300 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. முடக்கப்பட்ட சொத்துகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் உள்ளது என அமலாக்கத்துறை கூறி இருந்தது.
இந்நிலையில், இன்று (ஜன.,27) கர்நாடகா முதல்வரின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கர்நாடகா முழுவதும் சித்தராமையாவின் நெருங்கிய கூட்டாளிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் என்று விரைவில் தெரியவரும் என்கின்றனர் கர்நாடகா அரசியல்வாதிகள்.