போபாலில் விஷவாயு சம்பவம்: 40 ஆண்டுக்குப்பின் கழிவுகளை அழிக்க முயற்சி
போபாலில் விஷவாயு சம்பவம்: 40 ஆண்டுக்குப்பின் கழிவுகளை அழிக்க முயற்சி
ADDED : டிச 31, 2024 06:07 AM

போபால் : மத்திய பிரதேசத்தின் போபாலில் விஷவாயு கசிந்து பேரழிவை ஏற்படுத்திய சம்பவம் நடந்து, 40 ஆண்டுகளாகியுள்ள நிலையில், ஆலையில் உள்ள கழிவுகளை பாதுகாப்புடன் அழிக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன.
மத்திய பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள, 'யூனியன் கார்பைட்' பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984 டிச., 23ல், விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த சம்பவத்தில், 5,479 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, ஊனம் அடைந்தது, நிரந்தர சுகாதார பிரச்னைகளால், ஐந்து லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள இந்த ஆலையில் உள்ள, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தது. உடனடியாக அந்த கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, போபாலில் இருந்து 250 கி.மீ., தொலைவில், இந்துாருக்கு அருகே உள்ள பீதாம்புரில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்தில், இந்தக் கழிவுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கழிவுகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக, பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆறுக்கும் மேற்பட்ட டிரக்குகள், போபால் ஆலைக்கு வந்துள்ளன. முழு கவச உடை அணிந்த போபால் மாநகராட்சி, சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் முன்னிலையில், கழிவுகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.
இந்த கழிவுகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது, சாலையில் போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிவுகள் அடங்கிய டிரக்குகள், போபாலில் இருந்து அடுத்த சில நாட்களுக்குள் புறப்படும் என, கூறப்படுகிறது.
இந்துாருக்கு அருகில் உள்ள பீதாம்புரில் உள்ள கழிவுகள் மறுசுழற்சி மையத்தில், இந்த கழிவுகள் எரிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, 10,000 கிலோ கழிவுகளை எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளியாகும் வாயுக்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, நான்கு அடுக்கு பாதுகாப்பு பில்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
அதன்பின், எரிக்கப்பட்ட கழிவுகளின் சாம்பல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதில் ஆபத்து ஏற்படக் கூடிய பொருட்கள் உள்ளதா என்று ஆராயப்படும். பல அடுக்கு பாதுகாப்புடன் கூடிய பைகளில் இந்த சாம்பல்கள் அடைக்கப்பட்டு, பூமியில் புதைக்கப்பட உள்ளன. அந்தப் பகுதியில், மண் மற்றும் நீர் ஆதாரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட கழிவுகள் எரிப்புக்குப் பின், மற்ற கழிவுகள் படிப்படியாக அழிக்கப்பட உள்ளன. அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் அனைத்து கழிவுகளும் எரிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பீதாம்புர் பகுதியில் கழிவுகளை எரிக்கவும், பூமியில் புதைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.