முட்டையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகள்? நாடு முழுதும் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க உத்தரவு
முட்டையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகள்? நாடு முழுதும் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க உத்தரவு
UPDATED : டிச 17, 2025 10:53 AM
ADDED : டிச 17, 2025 01:18 AM

புதுடில்லி: முட்டைகளில் உடலுக்கு கேடு விளைவிப்பதாக தடை செய்யப்பட்ட, 'ஆன்டிபயாடிக்' எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளதா என்பதை நாடு முழுதும் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி மண்டல அலுவலகங்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த பிரபலமான, 'எகோஸ்' எனப்படும் நிறுவனத்தின் முட்டைகளில் தடை செய்யப்பட்ட, 'நைட்ரோபியூரான்' எனும், 'ஆன்டிபயாடிக்' மருந்தின் தடயங்கள் இருப்பதாக, 'யு டியூப்' சமூக ஊடகத்தில் ஒருவர் ஆய்வக பரிசோதனை அறிக்கையுடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிறுவனம் தங்கள் முட்டைகள், 100 சதவீதம் ஆன்டிபயாடிக் இல்லாமல் உற்பத்தி செய்யப்படுபவை என கூறியிருந்ததால், ஆய்வக அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.
'நைட்ரோபியூரான்' எனும் ஆன்டிபயாடிக் மருந்து கோழி, பன்றி, இறால் போன்ற உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதை மனிதர்கள் உண்ணும் போது, அந்த மருந்து உடலில் நீண்ட காலம் தங்கி, புற்றுநோய் மற்றும் மரபணு சேதத்தை ஏற்படுத்த கூடியது என ஆய்வில் கண்டறிந்தனர்.
இதையடுத்து இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் 'நைட்ரோபியூரான்' ஆன்டிபயாடிக்கை தடை செய்தன. இந்நிலையில், தடைசெய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து 'எகோஸ்' நிறுவன முட்டையில் கண்டறியப்பட்டுள்ளதால், மக்களிடையே முட்டையை உண்பது குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இதனால் டில்லியில் உள்ள எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாமாக முன் வந்து இந்த விவகாரத்தில் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மண்டல அலுவலகங்களுக்கு பிறப்பித்த உத்தரவில், 'அனைத்து நிறுவன முட்டைகளின் மாதிரிகளையும் பெற்று அதில் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளதா என பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, கூறியுள்ளனர்.
சர்ச்சை குறித்து, 'எகோஸ்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'எங்கள் பண்ணைகளில் தடை செய்யப்பட்ட எந்த ஆன்டிபயாடிக்கையும் பயன்படுத்தவில்லை. ஒரு கிலோ முட்டையில், 0.73 மைக்ரோ கிராம் ஆன்டிபயாடிக் இருந்ததாக சமூக வலைதளத்தில் கூறியுள்ளனர்.
'இது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அனுமதித்த 1 கிலோவுக்கு 1 மைக்ரோ கிராம் என்ற அளவுக்கு கீழ் தான் உள்ளது. அதுவும் ஆன்டிபயாடிக் பயன்பாட்டால் வந்தவை கிடையாது. தீவனம், நீர், மண் போன்ற சுற்றுப்புற மாசு காரணமாக இடம்பெற்றவை. எங்கள் முட்டைகள் பாதுகாப்பானவை' என கூறியுள்ளனர்.

