பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்; மஹா., முதல்வரை அறிவிப்பதில் தான் தாமதம்
பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்; மஹா., முதல்வரை அறிவிப்பதில் தான் தாமதம்
UPDATED : டிச 04, 2024 06:51 AM
ADDED : டிச 04, 2024 03:59 AM

மும்பை : மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் மஹாயுதி கூட்டணி, 288 தொகுதிகளில், 230ல் வென்றது. இதில், பா.ஜ., மட்டும் 132ல் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, 57 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்., 41 இடங்களிலும் வென்றன.
தேர்தல் முடிவுகள் வெளியாகி, 10 நாட்களை கடந்தும், முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுவதால், புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சி என்பதால், முதல்வர் பதவியை பா.ஜ., கேட்கிறது. ஆனால், கூட்டணி தர்மம், கவுரவ பிரச்னை உள்ளிட்ட காரணங்களை காட்டி, ஏக்நாத் ஷிண்டேயே முதல்வராக தொடர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மும்பையில் இன்று நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டசபை தலைவர், அதாவது முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மஹாயுதி கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டு, கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என்று பா.ஜ., ஏற்கனவே அறிவித்துள்ளது. மும்பை ஆசாத் மைதானத்தில், பதவியேற்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தானே மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு திரும்பிய காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை, நேற்று இரவு சந்தித்த பா.ஜ., மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ், உடல்நலம் குறித்து விசாரித்தார்.
ஒரு மணி நேரத்துக்கும் மேல் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, துணை முதல்வர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக பட்னவிசிடம் ஷிண்டே கூறியதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் நிலையில், ஷிண்டே - பட்னவிஸ் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.