ரூ.5 லட்சம் கடனுக்காக வீடு ஜப்தி மகனால் வீதிக்கு வந்த முதிய தம்பதி
ரூ.5 லட்சம் கடனுக்காக வீடு ஜப்தி மகனால் வீதிக்கு வந்த முதிய தம்பதி
ADDED : மார் 15, 2025 11:28 PM

விஜயபுரா: மகனின் வாழ்க்கைக்காக, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கிக் கொடுத்த முதிய தம்பதி, தற்போது வீட்டை பறிகொடுத்து வீதிக்கு வந்துள்ளனர்.
விஜயபுரா நகரின், ஆலகுன்டள நகரில் வசிப்பவர் வீரபத்ரா, 80. இவரது மனைவி பாக்யம்மா, 75. இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் சிறிய மனை வாங்கி, அதில் வீடு கட்டி வசித்தனர்.
தம்பதிக்கு பசவராஜ், நாகேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பசவராஜ் சொந்தமாக முடி திருத்தும் கடை வைக்க விரும்பினார். இதற்கு பணம் ஏற்பாடு செய்யும்படி, பெற்றோரிடம் கேட்டார். தம்பதியும் மகனின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, தங்கள் வீட்டை மைக்ரோ நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்து, ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தனர்.
இந்த பணத்தை வைத்து, முடி திருத்தும் கடை வைத்த பசவராஜ், கடனை அடைக்கவில்லை. பெற்றோரையும் தவிக்க விட்டு விட்டு, மனைவி, குழந்தைகளுடன் தனி குடித்தனம் சென்றுவிட்டார். மற்றொரு மகன் நாகேஷும் தனியாக வசிக்கிறார்.
முதிய தம்பதி ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தனர். தாங்கள் சேமித்து வைத்திருந்த மூன்று லட்சம் ரூபாயை, மாதந்தோறும் கடன் தவணையை கட்டி வந்தனர். கையிருப்பு காலியானது.
வேலை செய்து சம்பாதிக்க உடலில் சக்தி இல்லை. கடன் தவணையை செலுத்த முடியவில்லை.
ஓராண்டாக தவணையை செலுத்தாததால், பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று, நான்கு நாட்களுக்கு முன்பு தம்பதியின் வீட்டை ஜப்தி செய்தனர். வீட்டின் சுவரில் நோட்டீஸ் ஒட்டினர்.
மகன்களும் உதவிக்கு வரவில்லை. வீரபத்ராவும், அவரது மனைவி பாக்யம்மாவும் வீட்டின் எதிரே உள்ள சாலையில் வசிக்கின்றனர். அக்கம், பக்கத்தினர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வாழ்கின்றனர்.
பெற்றோர் வீதியில் வசிப்பது தெரிந்தும், மகன்கள் வந்து பார்க்கவும் இல்லை. 'இத்தகைய மோசமான பிள்ளைகள் யாருக்கும் பிறக்கக் கூடாது' என, கூறி பெற்றோர் கண்ணீர் சிந்துகின்றனர்.