ADDED : ஆக 07, 2024 01:11 AM
பகர்கஞ்ச்: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 65 வயது முதியவரின் ஜாமினை டில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
டில்லியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 60 வயது முதியவர், தனியே அழைத்துச் சென்று தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். கடைசியாக 2019 அக்டோபர் 9ல் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அந்த நபர் மீது கபஷேரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு விசாரணை நீதிமன்றம் 2022ல் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், குற்றஞ்சாட்டப்பட்ட முதியவரின் ஜாமின் மனு ரத்து செய்து, வரும் 9ம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட்டது.
தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:
பொதுவாக ஜாமின் வழங்கும் உத்தரவுகளில் நீதிமன்றங்கள் தலையிடாது. நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகள், விசாரணை நீதிமன்றத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டால், உயர் நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்வதில் நியாயம் இருக்கும்.
இத்தகைய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்குவது சமூகத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. மேலும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் எந்த நோக்கத்திற்காக இயற்றப்பட்டதோ, அதற்கு மாறாக நடக்கும்.
இவ்வாறு தன் தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.