தேர்தல் நடத்தை விதி அமல்; ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி
தேர்தல் நடத்தை விதி அமல்; ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி
UPDATED : மார் 15, 2026 08:46 PM
ADDED : மார் 15, 2026 04:46 PM

நமது சிறப்பு நிருபர்
தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பொதுமக்கள் பணம் கையில் எடுத்துச் செல்ல முடியும். அதற்கு மேல் பணம் கொண்டு செல்வோர், உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகளுக்கான நடத்தை விதிகளும் நடைமுறைக்கு வந்தன.
*பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
* தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் பணியை தொடங்கி உள்ளன.
* உரிய ஆவணங்கள் இன்றி பெரிய தொகையை எடுத்துச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* ஆளும் கட்சி அரசு இயந்திரத்தையோ, வாகனங்களையோ, அதிகாரிகளையோ சொந்தப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.
* வழிபாட்டுத் தலங்களைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. சாதி, மதம், மொழி அடிப்படையில் ஓட்டுக்களை கேட்கக் கூடாது .
* வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருட்களோ கொடுப்பது, மற்றும் ஓட்டுக்களுக்கு விலை பேசுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
* ஓட்டுப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் செய்யக்கூடாது.
* அரசு நிர்வாகம் தொடர்வதற்கான பணிகளை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ளலாம். அவசர நிர்வாக முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும்
* இயற்கை பேரிடர், வெள்ளம், புயல் போன்ற அவசர நிலைகளில் நடவடிக்கை எடுக்கலாம்
* நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நிர்வகிக்கலாம். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, புதிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட முடியாது
* அரசு அதிகாரிகளை தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி பணியிட மாற்றம் செய்ய முடியாது
* அரசு அலுவலகங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது
* அரசு அதிகாரிகள் வழக்கமான நிர்வாகப் பணிகளில் ஈடுபடலாமே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக செயல்பட முடியாது
* சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளலாம்
* அவசரமான அரசு சேவைகளை அதிகாரிகள் தொடரலாம்.
* தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஆவணங்கள் இன்றி அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல், அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும்.
தேர்தல் நடத்தை விதிகள் என்பது தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த தேர்தல் கமிஷனால் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விதிகள், அரசு அதிகாரம், பொதுப்பணத்தைப் பயன்படுத்தி பிரசாரம் செய்வதைத் தடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல், சாதி, மத ரீதியான வெறுப்புப் பிரசாரம், மற்றும் தேர்தல் கமிஷனின் அனுமதி இல்லாமல் புதிய திட்டங்கள் அறிவிப்பதை தடுப்பதற்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

