காங்கிரசுக்கு பதிலளிக்க தேர்தல் கமிஷன் தயார் !: தேர்தல் குறித்து சந்தேகம் எழுப்பியதால் அதிரடி
காங்கிரசுக்கு பதிலளிக்க தேர்தல் கமிஷன் தயார் !: தேர்தல் குறித்து சந்தேகம் எழுப்பியதால் அதிரடி
ADDED : டிச 01, 2024 05:06 AM
புதுடில்லி: சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பாக, காங்கிரஸ் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், வரும் 3ம் தேதி நேரில் வரும்படியும் தலைமை தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், மஹாராஷ்டிராவில் காங்., பெரும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாகவும், ஓட்டு சதவீதம் குறித்தும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது பேசிய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் நடைமுறை குறித்து சந்தேகம் எழுப்பினார்.
கமிஷன் காட்டம்
இறுதியாக, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 'இதைத் தொடர்ந்து, 'ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையின் செயல்பாடுகள் சமரசம் செய்யப்படுவதாக, காங்கிரஸ் நம்புகிறது.
'தேர்தல் கமிஷனின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளால், நேர்மையான, சுதந்திரமான தேர்தல் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
'இதை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில், தேசிய அளவில் மிகப்பெரிய அளவிலான பிரசார இயக்கத்தை விரைவில் துவக்கவுள்ளோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஹரியானா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தபோதும், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. அதற்கு தேர்தல் கமிஷன் காட்டமாக பதில் அளித்தது.
இதனால், கோபமடைந்த காங்கிரஸ் தலைவர்கள், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், மீண்டும் காங்கிரஸ் குற்றம் சாட்டியதை அடுத்து, தலைமை தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்ப்பது முதல் அனைத்து நடவடிக்கைகளும், வெளிப்படையாகவே நடக்கின்றன. அனைத்து நிலைகளிலும், அரசியல் கட்சிகளின் பங்களிப்புடனே நடத்தப்படுகின்றன.
ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும்போது, ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் கட்சிகளின் பிரதிநிதிகள் இருப்பர்.
அதுபோலவே, ஓட்டு எண்ணிக்கையின்போதும், கட்சிப் பிரதிநிதிகள் இருப்பர். இவ்வாறு கட்சியினர் பங்களிப்பு இல்லாமல், தேர்தல் கமிஷனின் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை.
காங்கிரஸ் சந்தேகம்
இருப்பினும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஓட்டு சதவீதம் குறித்து, காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது.
எந்த ஒரு நியாயமான சந்தேகத்துக்கும் பதிலளிக்க தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது. வரும் 3ம் தேதி கட்சி பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம். அப்போது உரிய விளக்கங்கள் அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.