ADDED : மார் 06, 2026 01:32 AM

புதுடில்லி: மெஹ்ராலி - பதார்பூர் சாலையில், எலக்ட்ரிக் பஸ் தீப்பிடித்து எரிந்தது. முழுவதும் தீயில் நாசமான இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
டில்லியின் ஆர்.கே.புரத்திலிருந்து, பதார்பூர் பார்டர் வரை, 544 என்ற எண் கொண்ட எலக்ட்ரிக் பஸ் நேற்று மதியம், 1:00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. தெற்கு டில்லியின் மெஹ்ராலி என்ற இடம் அருகே அந்த பஸ் சென்று கொண்டிருந்த போது, திடீரென தீப்பிடித்தது.
இதை அறிந்ததும், அந்த ப ஸ்சில் இருந்த பயணியர் அனைவரையும் பஸ்சின் கண்டக்டர் அரவிந்த்குமார் என்பவர், பத்திரமாக இறங்கச் செய்தார். இதையடுத்து, தீ மளமளவென பற்றியதில், அந்த பஸ் முழுவதும் எரிந்து நாசமானது .
அந்த பஸ்சில் தீப்பற்றிய போது, அதில், 15 பயணியர் மட்டுமே இருந்ததால், அனைவரும் உடனடியாக இறங்க முடிந்தது. மேலும், தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் அந்த பகுதிக்கு வருவதற்கு முன், அந்த பஸ் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. எனினும், இந்த விபத்தால், யாருக்கும் காயம் கூட ஏற்படவில்லை.

