திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் 'யானையூட்டு' விழா கோலாகலம்
திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் 'யானையூட்டு' விழா கோலாகலம்
ADDED : ஜூலை 18, 2025 12:25 AM

பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நேற்று 'யானையூட்டு' விழா கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம், திருச்சூரில் பிரசித்தி பெற்ற வடக்குநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் 1ம் தேதி யானைகளுக்கு உணவு வழங்கும், 'யானையூட்டு' நிகழ்ச்சி, சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, 'யானையூட்டு' விழா நேற்று நடந்தது. இதையொட்டி, தந்திரி புலியன்னூர் சங்கரநாராயணன் நம்பூதிரி தலைமையில் பிரம்மாண்ட மகாகணபதி ஹோமம் நடந்தது.
இதில், 12 ஆயிரம் கிலோ தேங்காய், வெல்லம், அவல் போன்றவை தலா இரண்டாயிரம் கிலோ, 500 கிலோ மலர், 80 கிலோ எள், 50 கிலோ தேன், எலுமிச்சை, கரும்பு, மூவாயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்பட்டன. காலை, 7:00 மணிக்கு கஜபூஜையும், தொடர்ந்து, 'யானையூட்டு' நிகழ்ச்சியும் நடந்தன.
'யானையூட்டு' நிகழ்ச்சியை கோவில் மேல்சாந்தி செறுமொக்கு ஸ்ரீராஜ் நாராயணன் நம்பூதிரி துவக்கி வைத்தார். மேற்கு கோபுர நடை வாயிலாக நுழைந்த, 70 யானைகள் கோவில் வளாகத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
அவற்றுக்கு, 500 கிலோ அரிசியால் சமைத்த உணவுடன், மஞ்சள், நெய், வெல்லம் சேர்ந்து, உணவூட்டி கொண்டாடினர். இது தவிர, அன்னாசி, வெள்ளரி, தர்பூசணி, வாழைப்பழம் என எட்டு வகையான பழங்களும் யானைகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்குப் பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மத்திய பெட்ரோலியம் துறை இணை அமைச்சர் சுரேஷ்கோபி, திருச்சூர் மேயர் வர்கீஸ், கலெக்டர் அர்ஜுன் பாண்டே, சிட்டி போலீஸ் கமிஷனர் இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.
மாலையில், சுற்று விளக்கு ஏற்றுதல், நிறமாலை தரிசனம், தீபாராதனை மற்றும் சிறப்பு பகவதி சேவை ஆகியவை நடைபெற்றன.

