காஷ்மீரில் 2 இடத்தில் என்கவுன்டர்: ராணுவ வீரர் வீரமரணம்
காஷ்மீரில் 2 இடத்தில் என்கவுன்டர்: ராணுவ வீரர் வீரமரணம்
ADDED : ஜூலை 24, 2024 11:14 AM

ஸ்ரீநகர்: கடந்த 24 மணி நேரத்தில், காஷ்மீரில் இரண்டு இடங்களில் நடந்த என்கவுன்டரில், சுபாஷ் சந்தர் என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். மேலும், ஒரு ராணுவ வீரர் பலத்த காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில், இன்று(ஜூலை 24) பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.
பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். அப்போது சுபாஷ் சந்தர் என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இது கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது என்கவுன்டர் ஆகும். சமீப காலங்களாக ஜம்முவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இப்பகுதியில் பயங்கரவாதம் புத்துயிர் பெறுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.