14 பிளாட் வேண்டாம்: கணவர் தான் வேண்டும்: சித்தராமையா மனைவி ‛முடா'விற்கு கடிதம்
14 பிளாட் வேண்டாம்: கணவர் தான் வேண்டும்: சித்தராமையா மனைவி ‛முடா'விற்கு கடிதம்
UPDATED : செப் 30, 2024 10:36 PM
ADDED : செப் 30, 2024 10:27 PM

பெங்களூரு : 'முடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தனக்கு ஒதுக்கிய 14 வீட்டு மனைகளை ‛முடா' விடம் ஒப்படைக்க மனைவி பார்வதி முடிவு செய்து கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, 76. இவரது மனைவி பார்வதி. இவருக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை லே -- அவுட் அமைப்பதற்காக, 'முடா' எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியது.
இதற்கு பதிலாக, மைசூரு நகரின் மையப் பகுதியான விஜயநகரில் 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனைவிக்கு வீட்டுமனை வாங்கிக் கொடுத்ததாக முதல்வர் மீது, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சித்தராமையா, பார்வதி, முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய, மைசூரு லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதி கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டார். 26ம் தேதி முதல்வர் உட்பட நான்கு பேர் மீது, 17 பிரிவுகளில் வழக்கு பதிவானது.
இந்நிலையில், முதல்வர் மீது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா, முடா வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி, கடந்த 28ம் தேதி அமலாக்கத் துறைக்கு அவர் புகார் செய்தார்.
அந்த புகாரின்படி, சித்தராமையா மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
விசாரணைக்கு ஆஜராகும்படி கூடிய விரைவில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் வாய்ப்புள்ளது. இது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிலத்தை ஒப்படைக்க பார்வதி முடிவு
இந்நிலையில் சித்தராமையா மனைவி பார்வதி ‛முடா'விற்கு கடிதம் எழுதினார். அதில் 14 வீட்டுமனைகளையும் ‛முடா'விடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். தனக்கு கணவர் தான் முக்கியம், நிலம் பெரிதல்ல எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.