94% வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை : அமலாக்க துறை இயக்குநர் பேச்சு
94% வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை : அமலாக்க துறை இயக்குநர் பேச்சு
ADDED : மே 01, 2025 11:37 PM

புதுடில்லி, “அமலாக்கத் துறை விசாரித்தவற்றில், 94 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளோம்,” என, அதன் இயக்குநர் ராகுல் நவீன் தெரிவித்தார்.
நாடு முழுதும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான குற்றங்களில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்கிறது.
விமர்சனம்
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டம், வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிரான சட்டம், 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் குற்றங்களை அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.
அமலாக்கத் துறை வசம் அதிக அளவில் அரசியல்வாதிகள் சிக்கும் நிலையில், வெறும் சோதனை மட்டுமே நடப்பதாகவும், வழக்கு முடிந்து யாருக்கும் தண்டனை கிடைத்தது போல் தெரியவில்லை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன் நேற்று பேசினார். கடந்த 1956 மே 1ல் அமலாக்கத் துறை அமைப்பு துவக்கப்பட்டது. அமலாக்கத் துறையின் 69ம் ஆண்டு நிறைவு விழா டில்லியில் நேற்று நடந்தது.
அதில், ராகுல் நவீன் பேசியதாவது:
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வசம் மொத்தம் 1,739 வழக்குகள் விசாரணை கட்டத்தில் இருக்கின்றன.
பண மோசடி குற்றங்களில் அமலாக்கத் துறையினர் வழக்குத் தொடருவதில் ஏற்படும் தாமதத்துக்கு, நாட்டின் நீதித் துறையில் ஏற்படும் பொதுவான தாமதமே காரணம்.
நிறைய வழக்குகளில் விசாரணைகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில், நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அமலாக்கத் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தண்டனை
குற்றங்கள் தொடர்பான விசாரணையில், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தடயவியல் பரிசோதனைகளை அமலாக்கத் துறை பயன்படுத்துகிறது.
இதுவரை, அமலாக்கத் துறை தொடர்ந்த 47 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது; அதில் மூன்று வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். 94 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.