ADDED : ஜன 31, 2024 05:37 AM
பெங்களூரு : கடனை அடைக்க யுடியூப்பை பார்த்து திருடிய மெக்கானிக்கல் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, கே.பி. அக்ரஹாராவின் டெலிகாம் லே - அவுட்டை சேர்ந்தவர் மதன் குமார், 35. இவர், அலுமினிய தொழிற்சாலை நடத்தி வந்தார். கடந்தாண்டு இவரது தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 80 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் காப்பீடு நிறுவனமோ, 2 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கியது.
இதனால் நஷ்டத்தை ஈடுகட்ட பலரிடம் கடன் வாங்கினார். ஆனால் குறித்த நேரத்தில் பணத்தை செலுத்த முடியாமல் தவித்தார். பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். எப்படியாவது பணத்தை செலுத்திவிட வேண்டும் என்று நினைத்தார்.
இதனால் திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்துத் திருட நினைத்தார். திருடுவதற்கு தேவையான பொருட்களை, யுடியூப்பில் பார்த்தார். அதன்படி, கையுறைகள், மரம் வெட்டும் இயந்திரம் உள்ளிட்டவற்றை வாங்கினார்.
கடந்த 17ம் தேதி இதே பகுதியில் பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் புகுந்த மதன் குமார், 110 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி, 1.35 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றார்.
வெளியூர் சென்றிருந்த வீட்டு உரிமையாளர்கள், மறுநாள் வீட்டுக்கு வந்த, திருட்டு நடந்திருப்பதை பார்த்து, கே.பி., அக்ரஹாரா போலீசில் புகார் அளித்தார்.
விசாரணை நடத்திய போலீசார், மதன்குமாரை கைது செய்து, அவரிடம் 110 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி, 1.35 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.