பி.எப்., வட்டி 8.25 சதவீதமாக நீடிக்கிறது; 7 கோடி பேர் பயன் அடைவார்கள்!
பி.எப்., வட்டி 8.25 சதவீதமாக நீடிக்கிறது; 7 கோடி பேர் பயன் அடைவார்கள்!
ADDED : பிப் 28, 2025 01:09 PM

புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) மீதான வட்டி விகிதம், 2024-25 நிதியாண்டில், கடந்த ஆண்டே போல் 8.25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, நிதி சூழலுக்கு ஏற்ப, புதுடில்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த 1977 - 78ல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இது, 2013 - 14 காலகட்டத்தில் 8.75 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது.
கடந்த 2021 - 22ம் ஆண்டுக்கான வட்டி விகிதம், 2022 மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. அப்போது 8.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த 2023- 24ம் நிதியாண்டில், 8.15 சதவீதமாக உள்ள வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், 2024-25ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) மீதான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக, கடந்த ஆண்டே போல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 7 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதித்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன், அரசாணையில் வெளியிடப்பட்டு, பயனாளர்களின் கணக்குகளில் வட்டி தொகை வரவு வைக்கப்படும்.