ADDED : ஜன 20, 2024 05:52 AM
கதக்: கஜேந்திரகடா உட்பட, பல்வேறு கிராமங்களில் சிறார்களுக்கு குரங்குக் காய்ச்சல் பரவுவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கதக் மாவட்டம், கஜேந்திரகடாவின் பல இடங்களில் குரங்கு காய்ச்சல் பரவுவது அதிகரிக்கிறது. 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜேந்திரகடாவில் 50 பேர், கொடகானுாரில் 25, வீராபுராவில் 10, குன்டோஜியில் 10, மாகலஜரியில் 10, ஜிகேரியில் 15 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் இத்தனை பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மக்கள் கிலி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்ட சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக டிசம்பர், ஜனவரியில் தொற்றுநோய்கள் தீவிரமடையும். ஒரு வாரம் பாதிப்பு இருக்கும். தனிமையில் இருந்து, டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றால் நோய் குணமடைவதுடன், மற்றவருக்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.
குரங்கு காய்ச்சல் ஒருவரிடம் இருந்து, மற்றவருக்கு எளிதாக பரவும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, காய்ச்சலுடன் கழுத்தின் இரண்டு பகுதிகளிலும் வீக்கம் ஏற்படும். சிலருக்கு எலும்புகளில் வலி தென்படும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், இந்த விஷயத்தை மேலதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம்.
குரங்கு காய்ச்சல், 'மம்ஸ்' என்ற கிருமியால் பரவக்கூடியதாகும். பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சுகாதாரத்துறை ஆய்வு செய்து, தகவல் பெறுகிறது. கதக்கின், ரோணா பகுதியில் சிலருக்கு, இந்த காய்ச்சல் தென்பட்டது. தற்போது கஜேந்திரகடாவிலும் தென்பட்டுள்ளது. எங்கள் குழுவை அனுப்பி, தகவல் சேகரிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.