உருளைக்கிழங்கில் இருந்து எத்தனால்: சோதனை ஆலை அமைக்க முடிவு
உருளைக்கிழங்கில் இருந்து எத்தனால்: சோதனை ஆலை அமைக்க முடிவு
ADDED : செப் 25, 2024 05:57 AM

புதுடில்லி: உருளைக்கிழங்கு கழிவுகளை எத்தனாலாக மாற்றும் சோதனை ஆலையை நிறுவ, மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவை மையமாக வைத்து செயல்படும், சி.பி.ஆர்.ஐ., எனப்படும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம், உருளைக்கிழங்கின் கழிவுகள் மற்றும் தோல்களில் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ஆய்வு செய்வதற்கு, ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
உருளைக்கிழங்கு கழிவுகளில் இருந்து உயிரி எரிபொருளை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பது குறித்த ஆய்வுகளை, இந்நிறுவனம் சமீபத்தில் நிறைவு செய்து உள்ளது. நம் நாட்டில், வீணாகும் உருளைக்கிழங்கின் அளவு அதிகமாக இருப்பதால், கரும்பு மற்றும் சோளத்துக்குப் பிறகு, எத்தனால் தயாரிப்புக்கு சாத்தியமான பொருளாக இது பார்க்கப்படுகிறது. மேலும், உயிரி எரிபொருளுக்கான தேசிய கொள்கையில், எத்தனால் தயாரிப்புக்கான உணவுப் பொருட்களில் அழுகிய உருளைக்கிழங்கும் சேர்க்கப்பட்டுள்ளது.
எத்தனால் தயாரிப்பதற்கான ஆலை, உத்தர பிரதேசம் அல்லது மேற்கு வங்கம் போன்ற உருளைக்கிழங்கு அதிகம் விளையும் மாநிலங்களிலும், குஜராத் போன்ற பதப்படுத்தும் பகுதிகளிலும் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உருளைக்கிழங்கு உற்பத்தியில், சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.