ADDED : அக் 16, 2024 02:31 AM
திருவனந்தபுரம், 'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களும் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்து தரப்படும்,'' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார்.
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு அடுத்த மாதம் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் துவங்க உள்ளது.
கடந்த ஆண்டு இந்த சீசனில், லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கேரள அரசு திணறியது.
ஆன்லைன் முன்பதிவின்றி நேரடியாக வந்து 'ஸ்பாட் புக்கிங்' செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறப்பட்டது. இதனால், இந்த ஆண்டு 'ஸ்பாட் புக்கிங்' வசதியை நிறுத்திவிட்டு, ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு வரும் பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என, கேரள அரசு முடிவு செய்தது.
இந்த முடிவால் ஆன்லைன் பற்றி அறியாத பக்தர்கள் தரிசனம் செய்யும் வாய்ப்பை இழப்பர் என, கேரள எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ., எதிர்ப்பு கடும் தெரிவித்தன.
சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை குறைப்பதிலேயே குறியாக இருப்பதாக, பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஸ்பாட் புக்கிங்கை அனுமதிக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்தது. கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறுகையில், ''ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்து தரப்படும். கடந்த ஆண்டு சபரிமலை சீசனின் போது வழங்கப்பட்ட அதே வசதிகள் வழங்கப்படும்,'' என்றார்.