வயநாடு மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும்: ராகுல், பிரியங்கா வேண்டுகோள்
வயநாடு மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும்: ராகுல், பிரியங்கா வேண்டுகோள்
ADDED : ஆக 01, 2024 05:35 PM

வயநாடு: ‛‛ நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும் '' என எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் மற்றும் அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காவும் கூறியுள்ளனர்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன், நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிறகு ராகுலும், பிரியங்காவும் நிருபர்களை சந்தித்தனர்.
வேதனை
அப்போது ராகுல் கூறியதாவது:வயநாடு நிலச்சரிவு மிகப்பெரிய பேரிடர். பெரும் துயரத்தை அளித்து உள்ளது. அப்பகுதி மக்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும். அனைத்து உதவிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி கிடைப்பது அவசியம். ஏராளமானோர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தவிப்பது வேதனை அளிக்கிறது.
நன்றி
மீட்பு பணியில் அயராது ஈடுபடுவோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வயநாடு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. அரசியல் குறித்து பேச உகந்த இடம் இது அல்ல. எனது தந்தையை இழந்த போது ஏற்பட்ட துயரத்தை, நிலச்சரிவால் பெற்றோரை இழந்துள்ளவர்களிடம் உணர்கிறேன். இவ்வாறு ராகுல் கூறினார்.
துயரம்
பிறகு பிரியங்கா கூறியதாவது: ஒட்டு மொத்த நாடும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும். உதவுபவர்களை பார்க்கும் போது உருக்கமாக உணர்கிறோம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்யப்படும். ஒவ்வொருவரும் குடும்பத்தை காப்பற்ற முயன்று தோற்று உயிரிழந்த துயரத்தை உணர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.