ADDED : அக் 08, 2025 11:46 PM
ராயவரம்: ஆந்திராவில், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திராவின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை உள்ளது.
இங்கு, பட்டாசு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக, பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உரசி வெடித்து சிதறின.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். எனினும், சிலர் தொழிற்சாலைக்குள் சிக்கினர்.
போலீசார், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில், ஆறு தொழிலாளர்கள் பலியானது தெரியவந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு உள் ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.