லோக்சபா செயலரின் பதவி நீட்டிப்பிற்கு சுஷ்மா எதிர்ப்பு
லோக்சபா செயலரின் பதவி நீட்டிப்பிற்கு சுஷ்மா எதிர்ப்பு
ADDED : செப் 01, 2011 12:06 AM

புதுடில்லி : லோக்சபா பொதுச் செயலர் டி.கே.விஸ்வநாதனின் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டதற்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஓராண்டுக்கு முன், முன்னாள் சட்டத் துறைச் செயலர் விஸ்வநாதன், லோக்சபா பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதற்கு அப்போதே சுஷ்மா சுவராஜ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஸ்வநாதனின் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதையும் அவர் எதிர்த்துள்ளார்.
இதுகுறித்து சபாநாயகர் மீரா குமாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விஸ்வநாதனின் நடத்தைகளும், குணங்களும், அவர் லோக்சபா பொதுச் செயலர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என்பதை காட்டுகின்றன. மேலும், அவரது பதவி நீட்டிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவருடன் அதிகாரபூர்வ கலந்தாலோசிப்பு எதுவும் நடத்தப்படவில்லை.
பார்லிமென்ட் செயலகத்தைச் சேர்ந்த ஒருவரே பொதுச் செயலராக நியமிக்கப்பட வேண்டும். கடந்த 11 மாதங்களுக்கு முன், அவர் பொதுச் செயலராக நியமிக்கப்படும் போதே, செயலகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் பொதுச் செயலராக
நியமிக்கப்பட வேண்டும் என நான் ஆட்சேபனை தெரிவித்தேன். ஆனால், செயலகத்தில் அப்பதவிக்குத் தகுதியுடையவர் ஒருவருமில்லை என்பதால் தான் விஸ்வநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என, சபாநாயகர் சமாதானம் கூறினார். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.