பிரதமர் வீடியோவை நீக்கியதற்காக மன்னிப்பு கேட்ட 'பேஸ்புக்' தலைவர்
பிரதமர் வீடியோவை நீக்கியதற்காக மன்னிப்பு கேட்ட 'பேஸ்புக்' தலைவர்
UPDATED : ஆக 06, 2026 05:51 PM
ADDED : ஆக 06, 2026 02:14 PM

புதுடில்லி: 'மெட்டா' நிறுவனத்தின் சமூக வலைதளங்களான, 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக்'கில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வீடியோவை நீக்கியது, குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்கள் மற்றும் போலி வீடியோக்களை அனுமதித்தது போன்றவற்றுக்கு, 'மெட்டா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
'சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் அவற்றின் ஒழுங்குமுறை' என்ற தலைப்பில், பார்லிமென்ட் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இதில், மத்திய உள்துறை, தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள், 'கூகுள், எக்ஸ், யு டியூப், ஸ்நாப்சாட்' மற்றும் பேஸ்புக் தாய் நிறுவனமான, 'மெட்டா' ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சந்திப்பு
கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவு தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரம் குறித்து, நிறுவன அதிகாரிகளிடம் குழு விளக்கம் கேட்டது.
மேலும், 'மெட்டா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மூன்று நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலருக்கு கடிதம் அனுப்பியது.
இதற்கிடையே மெட்டா நிறுவனத்தின் கொள்கை விவகாரங்களுக்கான சர்வதேச அதிகாரி ஜோயல் கப்லான் தலைமையிலான குழுவினர், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர் கிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. அதன் பின், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் அவர்கள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், பிரதமரின் அதிகாரப்பூர்வ பதிவு ஏன் நீக்கப்பட்டது, சரிபார்க்கப்பட்ட முக்கிய பிரமுகர்களின் கணக்குகளில் உள்ள பதிவுகளை நீக்குவதற்கு முன் என்னென்ன பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன, செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் தகவல்களை எவ்வாறு கண்காணிக்கின்றனர் என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.
வருத்தம்
அதற்கு குழுவினர் தங்களின் விளக்கத்தை அளித்தனர். இது குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்கள், 'டீப் பேக்' எனப்படும் தத்ரூப போலி படங்கள், வீடியோக்கள் மற்றும் பிரதமரின் வீடியோ நீக்கம் போன்ற தளத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட தவறுகளுக்கு மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் சார்பில், அந்நிறுவன பிரதிநிதிகள் மன்னிப்பு தெரிவித்தனர்.
குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்க விளம்பரங்கள், இன்ஸ்டாகிராமில் வெளியானதை மெட்டா தரப்பு ஒப்புக்கொண்டு, அதற்காக வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தது.
இதையடுத்து மெட்டாவிடம், 'எந்த பயனருக்கு எந்த உள்ளடக்கம் காட்டப் பட வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிப்பதால், உங்கள் நிறுவனம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, 'இடைநிலை நிறுவனம்' என்ற வரையறைக்குள் வராது' என அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அரசு வட்டாரங்கள் கூறின.
