ADDED : நவ 29, 2024 01:44 AM
புதுடில்லி, பட்டப்படிப்பு காலத்தை அதிகரித்துக் கொள்ள அல்லது குறைத்துக் கொள்ள, மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைகழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது.
யு.ஜி.சி., தலைவர் ஜகதீஷ் குமார் நேற்று கூறியதாவது:
தற்போது, பல வெளிநாட்டு பல்கலைகளில், மாணவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு காலத்தை நிர்ணயித்து கொள்ளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதன்படி, காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம் அல்லது குறைத்து கொள்ளலாம்.
இதுபோன்ற வாய்ப்பை நம் உயர் கல்வி நிறுவனங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான வரைவு திட்டம், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் இது குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
பட்டப் படிப்பு காலத்தை அதிகரித்துக் கொள்வது அல்லது குறைத்துக் கொள்வதற்கு ஏற்ப, மாணவர்களுக்கு வழங்கப்படும் கிரெடிட் எனப்படும் மதிப்பெண் குறியீடுகளும் மாறும்.
இவ்வாறு கூறினார்.