மஹாராஷ்டிரா முதல்வரானார் பட்னவிஸ் ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்கள்
மஹாராஷ்டிரா முதல்வரானார் பட்னவிஸ் ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்கள்
ADDED : டிச 06, 2024 12:59 AM

மும்பை, மஹாராஷ்டிராவின் முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் நேற்று பதவியேற்றார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கின் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவு, 23ம் தேதி வெளியானது. இதில், ஆளும் மஹாயுதி கூட்டணி, மொத்தம் உள்ள 288ல், 230 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
தயக்கம்
முதல்வர் பதவி யாருக்கு என்பதில் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
தனிப்பெரும் கட்சியான பா.ஜ., முதல்வர் பதவிக்கு உரிமை கோரியது. ஆனால், கூட்டணி தர்மம், கவுரவ பிரச்னை போன்ற காரணங்களை காட்டி, ஏக்நாத் ஷிண்டேயின் முதல்வர் பதவியை விட்டுத் தர சிவசேனா தயக்கம் காட்டியது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தலைவர் நட்டா ஆகியோருடன் பேச்சு நடத்திய பின், அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக ஷிண்டே கூறினார். ஆனாலும், முதல்வர் பதவியை விட்டுத் தருவதற்கு தயாராக இல்லை என்பதை அவர் உணர்த்தினார்.
இந்நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டது. கடைசி நேர பேச்சுக்குப் பின் சமரசம் ஏற்பட்டது.
இதையடுத்து, நேற்று நடந்த விழாவில், பா.ஜ., வின் தேவேந்திர பட்னவிஸ், முதல்வராக பதவியேற்றார். கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
கூட்டணியில் தொடருவாரா, தொடர்ந்தாலும், துணை முதல்வர் பதவியை ஏற்பாரா என்று கடைசி நேரம் வரை சந்தேகம் எழுந்த நிலையில், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்றார்.
தொடர்ந்து பேச்சு
கடந்த 2014ல் முதல் முறையாக முதல்வரான தேவேந்திர பட்னவிஸ், 54, தற்போது மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ளார். ஷிண்டே அரசில் அவர் துணை முதல்வராக இருந்தார். தற்போது ஆறாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ள அவர், மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
சிவசேனா கட்சியை உடைத்து, அதன் அங்கீகாரத்தையும் பெற்ற ஏக்நாத் ஷிண்டே, 60, கடந்த 2022ல் நடந்த அரசியல் மாற்றத்தில் முதல்வரானார். தற்போது இரண்டாவது முறையாக துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.
தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார், 65, தேர்ந்த அரசியல்வாதி. கட்சியை உடைத்து, அதன் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள அவர், தற்போது ஆறாவது முறையாக துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.
உத்தவ் தாக்கரே - சரத் பவார் கட்சிகள் கூட்டணி ஆட்சியிலும் அவர் துணை முதல்வராக இருந்தார்.
புதிய அரசில் இடம்பெற உள்ள அமைச்சர்கள், இலாகாக்கள் தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடக்கிறது.