ADDED : அக் 01, 2024 01:11 AM

புதுடில்லி, ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திடீரென மயக்கம் அடைந்தார். சிறிது நேரத்துக்கு பின், கார்கே பேசுகையில், 'எனக்கு 83 வயதாகிறது. மோடியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றும் வரை நான் சாக மாட்டேன்' என்றார்.
கார்கே மயக்கமடைந்த தகவலை அறிந்த பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்தார்.
இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - மல்லிகார்ஜுன கார்கே இடையே, நேற்று வார்த்தை மோதல் ஏற்பட்டது.
கார்கே பேச்சு தேவையற்றது!
மல்லிகார்ஜுன கார்கேவின் சமீபத்திய பேச்சு முற்றிலும் வெறுக்கத்தக்கதாகவும், அவமரியாதைக்கு உரியதாகவும் இருந்தது. இந்த விஷயத்தில், தன் கட்சித் தலைவர்களையே அவர் விஞ்சி விட்டார்.
தன் தனிப்பட்ட உடல்நிலை விவகாரத்தில், பிரதமர் மோடியை கார்கே இழுத்தது தேவையற்றது. இது, பிரதமர் மோடி மீது காங்., நிர்வாகிகளுக்கு எவ்வளவு வெறுப்பு, பயம் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
கார்கேவின் உடல்நிலை சரியாக, பிரதமர் மோடி பிரார்த்தனை செய்கிறார்; நானும் பிரார்த்தனை செய்கிறேன். அவர் நீண்ட காலம் வாழ வேண்டும். 2047க்குள் நம் நாடு வளர்ந்த நாடாக மாறுவதை காண்பதற்காக, கார்கே வாழ வேண்டும்.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
எவ்ளோ பிரச்னை இருக்கு!
மணிப்பூர் நெருக்கடி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு போன்ற தீவிரமான பிரச்னைகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புற சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களில், 92 சதவீதம் பேர் எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்கள் என, பா.ஜ., அரசின் சொந்த கணக்கெடுப்பு கூறுகிறது.
மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தினால் தான், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., வகுப்பினரின் பொருளாதார - சமூக நிலை, அரசு திட்டங்களின் பலன்கள் அவர்களை சென்றடைகிறதா என்பது தெரியவரும்.
ஆனால், ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிராக மத்திய அரசு உள்ளது. இந்த கணக்கெடுப்பை நடத்த காங்., உறுதியாக உள்ளது. இதை, நாங்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்போம்.
மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்.,