ADDED : ஆக 03, 2025 02:26 AM
புதுடில்லி:பிரபல நிறுவனம் பெயரில், போலி ஜீன்ஸ் பேன்ட் தயாரித்து விற்ற, மூன்று ஜவுளிக் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு, 684 போலி ஜீன்ஸ் பேன்ட்கள், 350 பிரபல நிறுவனத்தின் போலி லேபிள்கள், மூன்று தையல் மிஷின்கள் பறி முதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் புறநகர் துணைக் கமிஷனர் சச்சின் சர்மா கூறியதாவது:
ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களான லெவி ஸ்ட்ராஸ் & கோ, டி.கே.ஹெச். ரீடெய்ல் லிமிடெட், கால்வின் க்ளீன், ஹ்யூகோ பாஸ் மற்றும் ஜாரா ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனையாளரான நெட்ரிகா கன்சல்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜூலை, 30ம் தேதி கொடுத்த புகாரில், 'டில்லி போலீசில் கொடுத்த புகாரில், பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலி ஜீன்ஸ் பேன்ட் தயாரித்து விற்பதாக' கூறப்பட்டு இருந்தது.
சுல்தான்புரி மற்றும் கிராரி சுலேமான் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து, 684 போலி ஜீன்ஸ் பேன்ட்கள், 350 பிரபல நிறுவத்தின் போலி லேபிள்கள் மற்றும் மூன்று தையல் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலி ஜீன்ஸ் தயாரித்த ஷெரீப்,29, ஜாவேத்,35, மற்றும் சல்மான்,29, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.