பஹல்காமில் கொல்லப்பட்டோருக்கு குடும்பத்தினர் பிரியாவிடை
பஹல்காமில் கொல்லப்பட்டோருக்கு குடும்பத்தினர் பிரியாவிடை
UPDATED : ஏப் 25, 2025 01:03 AM
ADDED : ஏப் 25, 2025 12:54 AM

புதுடில்லி : ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில், கடந்த 22-ல் சுற்றுலா பயணியர் மீது பாக், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்கள், ஸ்ரீநகரில் இருந்து, விமானங்கள் வாயிலாக, அவரவர் மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தன.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பங்கேற்றார். விமானப்படையில் பணியாற்றிய அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கார்போரல் தேஜ் ஹைலாங், 30, உடலுக்கு அசாம் அமைச்சர் ஜெயந்த மல்லா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
துபாயில் பணியாற்றிய நீரஜ் உத்வானி உடல், ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு, சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. ம.பி.,யைச் சேர்ந்த எல்.ஐ.சி., அதிகாரி சுஷில் நாதனியால் உடல் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அதில், முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்றார்.
மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் டோம்பிவ்லியில் உறவினர்களான சஞ்சய் லேலே 50, ஹேமந்த் ஜோஷி, 45, அதுல் மோனே, 43, ஆகிய மூவரின் உடல்கள் எரியூட்டப்பட்டபோது, அந்தப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்தது. இறுதிச் சடங்கில் மஹா., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பங்கேற்றார்.
உ.பி.,யின் கான்பூரைச் சேர்ந்த சுபம் திவேதி, 31, உடல், சொந்த ஊரான ஹதிபூரில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதில், உ.பி., அமைச்சர்கள் யோகேந்திரா, ராகேஷ் சச்சான் பங்கேற்றனர்.
ஒடிஷாவின் பலசோரைச் சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் இன்ஜினீயரான பிரசாந்த் சத்பதி, 41, உடலுக்கு, அவரது 9 வயது மகன் தனுஜ்குமார் எரியூட்டியது மனதை கலங்கச் செய்தது. குஜராத்தின் பாவ்நகரைச் சேர்ந்த யதிஷ் பர்மார், அவரது மகன் ஸ்மித் ஆகியோரின் இறுதிச்சடங்கில் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்டார்.
சூரத்தைச் சேர்ந்த சைலேஷ் கலாத்தியாவின் உடல், மோட்டா வராச்சாவில் அடக்கம் செய்யப்பட்டபோது, மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் பங்கேற்றார்.