கு.க., சிகிச்சையில் பெண் பலி; குடும்பத்தினர் போராட்டம்
கு.க., சிகிச்சையில் பெண் பலி; குடும்பத்தினர் போராட்டம்
ADDED : ஜன 22, 2025 11:34 PM
குடகு :   குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழந்தார். 'டாக்டர்களின் அலட்சியமே காரணம்' என குற்றஞ்சாட்டி குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடகு மாவட்டம், குஷால் நகரின் சமுதாய சுகாதார மையத்தில், மத்திய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. அறுவை சிகிச்சைக்காக 12 பெண்கள் பெயரை பதிவு செய்திருந்தனர்.
மைசூரின், பிரியாபட்டணாவில் வசித்த சாந்தி, 27, என்ற பெண்ணும் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, அவருக்கு மயக்க மருந்து கொடுத்த பின், உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை மடிகேரி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
'சாந்தியின் இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம்' என குற்றஞ்சாட்டி, குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, விசாரணை நடத்தும்படி குஷால் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சாந்தியின் கணவர் செல்லதுரை கூறியதாவது:
என் மனைவி ஆரோக்கியமாக இருந்தார். அறுவை சிகிச்சை அறைக்கு செல்வதற்கு முன்பு, எங்களின் 4 மாத குழந்தைக்கு இரண்டு முறை தாய்ப்பால் புகட்டினார். அறுவை சிகிச்சை அறையில், என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அவரை பார்க்கவும் டாக்டர்கள் விடவில்லை. டாக்டர்களின் அலட்சியமே, என் மனைவியின் இறப்புக்கு காரணம். இது குறித்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடகு எஸ்.பி., ராமராஜன், நேற்று அளித்த பேட்டி:
சாந்தி இறப்பு குறித்து, குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். சாந்தியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.  குடகு, தட்சிணகன்னடா உட்பட பல்வேறு மாவட்டங்களில் இதே டாக்டர்கள் குழுவினர் 20 ஆண்டுகளாக, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இப்போது முதன் முறையாக, இத்தகைய அசம்பாவிதம் நடந்துள்ளது. அனைத்து கோணங்களிலும், விசாரணை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

