ADDED : ஏப் 20, 2025 03:13 AM

திருவனந்தபுரம்: ரெய்டுக்கு வந்த போலீசை கண்டு பயந்து ஓடிய பிரபல வில்லன் நடிகரான, கேரளாவைச் சேர்ந்த ஷைன் டாம் சாக்கோ நேற்று போலீசில் சரணடைந்தார். நீண்ட விசாரணைக்கு பின்னர் அவரது பெற்றோரின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள ஷைன் டான் சாக்கோ, போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், போதையில் நடிகையரிடம் அத்துமீறுவதாகவும், நடிகை வின்சி அலோஷியஸ் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொச்சியில் ஒரு ஹோட்டலில் இவர் தங்கி இருந்தார். அங்கு போதைப்பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் அங்கு ரெய்டுக்கு சென்றபோது, பின்பக்கக் கதவை திறந்து இரண்டாவது மாடியில் குதித்து, அங்கிருந்து நீச்சல் குளத்தில் குதித்து சாக்கோ தப்பினார்.
நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், நேற்று இவர் போலீசில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் நீண்ட விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் மெத் ஆம்பெட்டமைன் மற்றும் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் உண்டு என, போலீசில் வாக்குமூலம் அளித்தார். எனினும், ஹோட்டலில் போலீசார் வந்தபோது, தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும், குண்டர்கள் தன்னை தாக்க வருவதாக நினைத்து தப்பி ஓடியதாகவும் கூறினார்.
எனினும், ஷைன் டாம் சாக்கோ மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். அதில், முதல் நபராக சாக்கோ, இரண்டாம் நபராக அவருடன் அறையில் இருந்த மலப்புரம், வளவனுாரைச் சேர்ந்த அகமது முர்ஷாத்தும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், சாக்கோ தப்பி ஓடியது போதைப்பொருள் சம்பந்தமான தடயங்களை அழிப்பதற்காக என, குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று இவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர், போதைப்பொருள் பயன்படுத்துகிறாரா என்பதை கண்டறிய ரத்தம், நகம், தலைமுடி போன்றவற்றின் மாதிரி எடுக்கப்பட்ட பின்னர், அவரது பெற்றோரின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நாளை இவர் மீண்டும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென உத்தரவு இடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விவகாரத்தில் கேரள போலீசார் தேடிக் கொண்டிருக்கும் சஜீர் என்பவர் உடன் சாக்கோவுக்கு தொடர்பு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சஜீருடன் இவர் கூகுள்பே வழியாக பணம் அனுப்பிய விபரங்களும் போலீசுக்கு கிடைத்துள்ளது.
முதலில் இதை மறுத்த நடிகர் சாக்கோ, போலீசார் ஆதாரங்களை சமர்ப்பித்த போது ஒப்புக்கொண்டார். ஆலப்புழை ஹைபிரிட் கஞ்சா வழக்கில் தொடர்புடைய தஸ்லீமா சுல்தானுடனும் இவருக்கு தொடர்பு இருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
நடிகை வின்சி அலோஷியஸ் புகார் பற்றி போலீசார் கேட்டபோது, அது அடிப்படை ஆதாரமற்றது என்றும், ஈகோவால் சொல்லப்பட்ட புகார் என்றும் சாக்கோ கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

