முடிச்சு விட்டீங்க போங்க... கெஜ்ரிவால் மீது பிரசாந்த் பூஷண் பகீர் குற்றச்சாட்டு
முடிச்சு விட்டீங்க போங்க... கெஜ்ரிவால் மீது பிரசாந்த் பூஷண் பகீர் குற்றச்சாட்டு
ADDED : பிப் 09, 2025 05:45 PM

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு என்று அந்த கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம்ஆத்மி கட்சி, அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. இந்தத் தோல்விக்கு கெஜ்ரிவாலின் ஊழல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான் காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஆம்ஆத்மியின் முன்னாள் நிர்வாகிகள், கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில், டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி அடைந்த தோல்வி பற்றி, அந்த கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் வெளிப்படையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு. மாற்று அரசியலுக்காக உருவாக்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சி வெளிப்படைத்தன்மையுடனும், ஜனநாயக முறையுடனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் வெளிப்படைத்தன்மையற்ற, ஊழல் நிறைந்த கட்சியாக அதனை மாற்றி விட்டார். ஊழல் எதிர்ப்பு ஆணையமான லோக்பால் சட்டத்தை அவர் மதிக்கவில்லை. மாறாக, லோக்பாலை அவர் நீக்கினார்.
அதுமட்டுமில்லாமல், கெஜ்ரிவால் தனக்காக ரூ.45 கோடியில் மஹால் ஒன்றை கட்டினார். விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு கார்களில் செல்லத் தொடங்கினார். ஆம்ஆத்மி நிபுணர் குழு தயாரித்த 33 கொள்கை அறிக்கைகளை நிராகரித்தார். மேலும், பகட்டு பிரசாரம் மற்றும் பேச்சுக்களால் அரசியல் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டுள்ளார். இதுவே ஆம்ஆத்மியின் முடிவுக்கு ஆரம்பமாகி விட்டது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளர்.
இந்தப் பதிவில், ஆம்ஆத்மியில் இருந்து விலகும் போது, கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார். முன்னாள் நிர்வாகியின் இந்தப் பதிவு, ஆம்ஆத்மியினரிடையே மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.