புதுச்சேரி அலியான்ஸ் பிரான்சேவில் காற்றாடி கேமரா புகைப்பட கண்காட்சி
புதுச்சேரி அலியான்ஸ் பிரான்சேவில் காற்றாடி கேமரா புகைப்பட கண்காட்சி
ADDED : ஆக 22, 2011 12:27 AM
புதுச்சேரி : புதுச்சேரி ஆரோதன் மற்றும் அலியான்ஸ் பிரான்சேவில் நடந்து வரும் காற்றாடி மூலம் எடுக்கப்பட்ட அரிய புகைப்பட கண்காட்சி, அனைவரையும் கவர்ந்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் நிக்கோலஸ் கோரியே.
இவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக காற்றாடிகளை வானில் ஏவி ரிமோட் கன்ட்ரோல் கேமரா மூலம், அழகிய புகைப்படம் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவருடைய, 'பேர்ட்ஸ் வியூ புகைப்பட கண்காட்சி மலேசியா, பிரேசில், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவிலும் ஆம்பர் கோட்டை, தாஜ்மகால், நாகூர் கோட்டை, ஹம்பி, கேரளா கடற்கரை பகுதியில் காற்றாடியுடன் இணைக்கப்பட்ட கேமரா மூலம் போட்டோக்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு புதுச்சேரி சுற்றுலாத் துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க, புதுச்சேரியின் பல்வேறு இடங்களை பல கோணங்களில் படம் எடுத்துள்ளார். புதுச்சேரியைப் பற்றி இவர் எடுத்த அரிய புகைப்பட கண்காட்சி குருசுக்குப்பம் ஆரோதன் கேலரி, மேசன் கொலம்பானியில் கடந்த 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கண்காட்சியில் எழில் சூழ்ந்த பாரதி பூங்கா, தூய இருதய ஆண்டவர் கோவில், அழகு சூழ்ந்த சுண்ணாம்பாறு பேரடைஸ் பீச், வில்லியனூர் பெரிய கோவில், காந்தி சிலை, மாசி மகம் போன்ற மக்கள் கூடும் இடங்கள் பெற்றுள்ளன. காற்றின் திசைக்கேற்ப காற்றாடிகளை செலுத்தி மானிட்டரில் புகைப்பட கோணங்களை கணநேரத்தில் நகர்த்தி இந்த அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
புதுச்சேரி நகரின் அழகை, தாழ்வாக பறந்தபடி இதுவரை புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. இந்த குறையை நிக்கோலஸ் கோரியோவின் காற்றாடி கேமராக்கள் போக்கி, டாப் ஆங்கிளில் அரிய படங்களை பதிவு செய்துள்ளன.
புதுச்சேரி நகரின் அழகை கண்டுகளிக்க நினைக்கும் சுற்றுலா பயணிகளுக்கும், காற்றாடி கேமரா புகைப்படக் கலையை புரிந்து கொள்ள நினைக்கும் போட்டோ கிராபர்களுக்கும் இந்த கண்காட்சி ஒரு வரப்பிரசாதம். இக்கண்காட்சி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது.