லக்கி காருக்கு ரூ.4 லட்சத்தில் இறுதி ஊர்வலம், அடக்கம்! விவசாயியின் வினோத பாசம்
லக்கி காருக்கு ரூ.4 லட்சத்தில் இறுதி ஊர்வலம், அடக்கம்! விவசாயியின் வினோத பாசம்
UPDATED : நவ 08, 2024 06:11 PM
ADDED : நவ 08, 2024 05:49 PM

அகமதாபாத்: குஜராத்தில் விவசாயி ஒருவர் தமது அதிர்ஷ்ட காருக்கு ரூ.4 லட்சம் செலவில் இறுதி ஊர்வலம் நடத்தி காரை அடக்கம் செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
ஒரு விஷயத்தில் நாம் அன்பு வைத்துவிட்டால் எந்த தருணத்திலும் மாற்றிக் கொள்ள மாட்டோம். அது உயிருள்ள செல்ல பிராணியாக இருந்தாலும் சரி, உயிரற்ற பொருளாக இருந்தாலும் சரி. அதை பற்றிய நினைவுகளை மனதில் நினைந்து சுமந்தபடியே இருப்போம்.
அப்படி தாம் பாசம் வைத்த பொருள் ஒன்றின் நினைவுகளை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக குஜராத்தில் விவசாயி ஒருவர் செய்த செயல்தான் டன்கணக்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமது லக்கியான காரை ரூ.4 லட்சம் செலவு செய்து சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்திருக்கிறார்.
இதுபற்றிய விவரம் வருமாறு; அம்ரேலி மாவட்டம் படார்சிங்கே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் போலரே. விவசாயி. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தமது சொந்த உபயோகத்துக்காக பிரபல நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கி உள்ளார். கார் வாங்கிய தருணமோ என்னவோ, அவரின் நிலைமை அப்படியே தலைகீழானது.
வருமானம், வசதி வாய்ப்பு, மகிழ்ச்சி என அனைத்தும் சஞ்சய் போலரேவுக்கு கணக்கில் அடங்காமல் வந்துள்ளது. அபரிதமான செழிப்பு, சந்தோஷம் என காருடன் வீட்டுக்கு வந்த தருணம் முதல் வாழ்வில் பெரிய ஏற்றம் கண்டுள்ளார். தமது அனைத்து முன்னேற்றத்துக்கும் கார் வந்த சமயமே காரணம் என்று எண்ண ஆரம்பித்தார். அதன் காரணமாக ராசியான காரை, தமது வீட்டில் ஒருவராக நினைத்து பூஜித்து வந்தார்.
இந் நிலையில் ஆண்டுகள் பல கடந்துவிட்டதால் காரை யாருக்கும் தராமல் தனது சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய எண்ணினார். எப்போதும் எங்களின் நினைவில் கார் இருக்க வேண்டும் என்பதற்காக காருக்கு சமாதி கட்ட அவர் திட்டமிட்டார். இதற்காக பத்திரிகை அடித்து கார் அடக்கம் செய்யும் நாளன்று அவசியம் வருமாறு ஊரில் உள்ள அனைவருக்கும் விநியோகித்தார்.
அந்த நாளும் வர, ஆயிரக்கணக்கான ஊர்மக்கள் முன்னிலையில் தமது அதிர்ஷ்ட காரை சொந்த நிலத்தில் அடக்கம் செய்தார். இதற்காக அவர் ரூ.4 லட்சம் வரை செலவு செய்துள்ளார். குடும்ப உறுப்பினர் ஒருவர் நம்முடன் வாழ்ந்து மறைந்தால் அவருக்கு எப்படி இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வோமோ அதேபோன்று சடங்குகளை தமது ராசியானன காருக்கு, சஞ்சய் போலரே குடும்பத்துடன் செய்தார்.
பின்னர், பெரிய ஜேசிபி எந்திரம் கொண்டு தோண்டப்பட்ட குழியில் ராசியான கார் இறக்கப்பட்டது. கார் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சஞ்சய் போலரே, அவரது குடும்பத்தினர் மண் அள்ளி போட, பிரியா விடையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சஞ்சய் போலரேவின் இந்த செயலை கண்டு வியந்த ஊர் மக்களுக்கு, பின்னர் தடபுடலாக விருந்தும் பரிமாறப்பட்டதுதான் கூடுதல் ஆச்சரியம்.