ADDED : டிச 15, 2024 11:20 PM
ராம்நகர்: வயலில் காவலுக்கு இருந்த விவசாயியை, உணவு தேடி வந்த யானை தாக்கி கொன்றது.
ராம்நகர் மாவட்டம், கனகபுராவின் ஹக்கனுருதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கரியப்பா, 75. கிராமத்தின் வெளிப்பகுதியில் உள்ள தன் நிலத்திற்கு காவல் காக்க, இரவில் வயல் பகுதியில் தங்கினார்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில் உணவு தேடி வந்த யானை ஒன்று, வயல் ஓரத்தில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கரியப்பாவை மிதித்து கொன்றது. இவரின் அலறல் சத்தம் கேட்ட, பக்கத்து வயல்களில் காவலில் இருந்தவர்கள், சாத்தனுார் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த அதிகாரிகள், கரியப்பாவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்று, கிரனகல்லுதொட்டி கிராமத்தில், நான்கைந்து யானைகள் புகுந்து, 25 தென்னை மரங்கள், வாழை மரங்கள், சிறு தானிய விளைச்சல்களை சேதப்படுத்தி உள்ளன. அச்சுறுத்தலாக இருக்கும் யானைகளை, வேறு பகுதிக்கு விரட்டி அடிக்கும்படி கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

