ADDED : பிப் 02, 2024 10:59 PM

ராம்நகர்: யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
ராம்நகர் கனகபுரா கவுடஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ராஜு, 48; விவசாயி. நேற்று முன்தினம் மாலை, மாடுகளை மேய்ச்சலுக்காக, வனப்பகுதிக்கு அழைத்து சென்றார்.
அப்போது அங்கு நின்ற காட்டு யானை, ராஜுவை துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க ஓடியவர், கால்தவறி கீழே விழுந்தார். அவரை துாக்கி வீசிய காட்டு யானை, தும்பிக்கையால் தாக்கியதுடன், காலால் மிதித்து கொன்றது.
இரவு ஆகியும் ராஜு வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது வனப்பகுதியில் புதருக்குள் இறந்து கிடந்தார்.
அங்கு சென்ற வனத்துறையினர், கனகபுரா போலீசார், உடலை பார்வையிட்டனர். ராஜு உடலை எடுக்கவிடாமல், கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
அரசிடம் பேசி உடனடியாக நிவாரணம் வாங்கி தருவதாக, வனத்துறையினர் உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.
கனகபுரா தொகுதி, துணை முதல்வர் சிவகுமாரின் சொந்த ஊர்.
இங்கு சமீபகாலமாக காட்டு யானைகள், தொல்லை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

