14,000 பேர், 1200 டிராக்டர், 300 கார்கள் பஞ்சாப் - ஹரியானா எல்லையில் விவசாயிகள்
14,000 பேர், 1200 டிராக்டர், 300 கார்கள் பஞ்சாப் - ஹரியானா எல்லையில் விவசாயிகள்
UPDATED : பிப் 21, 2024 02:21 PM
ADDED : பிப் 21, 2024 08:32 AM

புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகள் இன்று (பிப்., 21) டில்லியை நோக்கி பேரணியாக புறப்படனர். அப்போது பஞ்சாப்- ஹரியானா எல்லைப்பகுதியான ஷம்பு என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் மீது ஹரியானா மாநில போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டில்லி , பஞ்சாப், ஹரியானா எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி பேரணி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் தலையீட்டால் மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுடன் பேச்சு நடத்தினர். 4 கட்ட பேச்சும் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து டில்லியை முற்றுகையிடும் போராட்டம் இன்று துவங்கியது. பஞ்சாப்- ஹரியானா எல்லைப்பகுதியான ஷம்பு என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் மீது ஹரியானா மாநில போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதற்கென பஞ்சாப், ஹரியானா, உ..பி., மாநிலங்களில் இருந்து விவசாயிகள் பலர் வந்துள்ளனர். இதில் 14,000 பேர், 1200 டிராக்டர், 300 கார்களில் அணிவகுத்து வந்த வண்ணம் உள்ளனர். மேலும் முன்னேறாமல் இருக்க டில்லியின் எல்லைகளில் துணை ராணுவ படை குவிக்கப்பட்டுள்ளது.

